பாலியல் பலாத்கார வழக்கு: கேரளாவில் காங்., - எம்.எல்.ஏ., கைது
பாலியல் பலாத்கார வழக்கு: கேரளாவில் காங்., - எம்.எல்.ஏ., கைது
ADDED : ஜன 12, 2026 12:42 AM

திருவனந்தபுரம்: கேரளாவில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராகுல் மம்கூட்டதில், 36, மீது, மூன்றாவதாக ஒரு பெண் பாலியல் பலாத்கார புகார் அளித்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில், பாலக்காடு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ராகுல் மம்கூட்டதில். இவர் மீது, பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.
இதில், ராகுலை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இரண்டாவதாக மற்றொரு பெண், அவர் மீது பாலியல் புகார் அளித்தார். இந்த வழக்கில், முன்ஜாமின் பெற்ற ராகுல், சுதந்திரமாக உலாவி வந்தார்.
அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் நீக்கியது.
இந்நிலையில், ராகுல் மீது, மூன்றாவதாக ஒரு பெண் பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். கேரளாவின் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த அந்த பெண், வட அமெரிக்க நாடான கனடாவில் வசித்து வருகிறார். அங்கிருந்து இ - மெயில் வாயிலாக கேரள போலீசாருக்கு புகார் அளித்தார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: என் திருமண வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்ட சமயத்தில், சமூக ஊடகம் வாயிலாக ராகுலுடன் நட்பு ஏற்பட்டது. அடுத்த சில நாட்களில் இருவரும் சந்தித்தோம். அடுத்ததாக, என்னை திருமணம் செய்வதாக அவர் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து என்னை வலுக்கட்டாயமாக ராகுல் பலாத்காரம் செய்தார்.
இதில், நான் கர்ப்பம் தரித்தநிலையில், அதை கலைக்கும்படி வற்புறுத்தினார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. என்னுடன் உறவில் இருந்தபோது, பலமுறை ஆயிரக்கணக்கில் ராகுல் பணம் பறித்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ராகுல் மம்கூட்டதில் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், பாலக்காட்டில் அவரை கைது செய்தனர்.

