ADDED : அக் 09, 2025 03:14 AM
புதுடில்லி:குளிர்காலம் நெருங்குவதால், காற்று மாசை கட்டுப்படுத்த டில்லியில் 153 சாலைகளில் சீரமைப்புப் பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பழுதடைந்த சாலைகளில் தேங்கும் துாசியால் காற்று மாசு மேலும் அதிகரிக்கிறது. கடுங்குளிர் காலம் நெருங்குவதால் காற்று மாசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
டில்லியில் பழுதடைந்துள்ள 153 சாலைகளில் சீரமைக்கும் பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டவுடன் பணிகள் உடனடியாக துவக்கப்படும். சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை அடைத்தல், சீர்குலைந்துள்ள பகுதிகளில் ஒட்டுவேலை போன்ற பணிகள் செய்யப்படும்.
கடந்த மாதம், சாலை உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை மேற்கொள்ள டில்லி அரசுக்கு 803 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியது. மேலும், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதால், சாலைகளில் பள்ளங்கள், விரிசல்கள் ஏற்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.