3 கோடி ரூபாய் நெல் மோசடி வழக்கில் அரிசி மில் உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
3 கோடி ரூபாய் நெல் மோசடி வழக்கில் அரிசி மில் உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
ADDED : ஜன 13, 2026 10:21 PM

அமராவதி:ஆந்திராவில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான நெல் மோசடி வழக்கில் அரிசி மில் உரிமையாளருக்கு பலாசா நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசாவில் முகில்லிபாடு ஸ்ரீ முரளிகிருஷ்ணா அரிசி மில் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் சேஷனபுரி முரளிகிருஷ்ணா 51, இவர் மீது 2014-15 ஆம் ஆண்டு ராபி, காரிப் பருவங்களில் அரசு வழங்கிய 4,753 மெட்ரிக் டன் ஏ கிரேவு நெல்லை அரிசியாக மாற்றி தராமல் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக அரசுக்கு ரூ.3 கோடி இழப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, அப்போதைய மாவட்ட கலெக்டர் விவேக் யாதவ் அளித்த புகாரின் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காசிபுக்கா போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு பலாசா கோர்ட்டில் நடந்து வந்தது.
இன்று நடந்த வழக்கு விசாரணையில் நீதிபதி உ.மாரி வழங்கிய தீர்ப்பில், நம்பிக்கை துரோகம்(ஐபிசி 406) பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துதல்(ஐபிசி 403) பிரிவின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பிரிவிற்கும் தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.இந்த தண்டனைகளை அவர் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

