ADDED : டிச 23, 2024 06:51 AM
உடுப்பி: கடலில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில், படகோட்டி நீரில் அடித்துச் செல்லப்பட்டார். சுற்றுலா பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பெங்களூரை சேர்ந்தவர் பிரசாந்த். நேற்று ஞாயிறு என்பதால், உடுப்பி, குந்தாபுராவின், திராசி கடற்கரைக்கு சுற்றுலா வந்திருந்தார். கடலில் படகு சவாரி சென்று கொண்டிருந்தார். ரவிதாஸ் படகை செலுத்தினார்.
அப்போது திடீரென அலைகளில் தள்ளாடி, படகு கவிழ்ந்தது. இருவரும் நீரில் விழுந்தனர். லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால், பிரசாந்த் தப்பினார்; ரவிதாஸ் நீரில் மூழ்கினார்.
தகவலறிந்து அங்கு வந்த கடலோர காவல் படையினர், நீச்சல் வீரர்களின் உதவியுடன், ரைடர் ரவிதாசை தேடுகின்றனர். இது குறித்து கங்கொல்லி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.
கடற்கரைகளில் அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடக்கின்றன. சில நாட்களுக்கு முன்புதான் உத்தரகன்னடாவின், முருடேஸ்வரா கடலில் விழுந்து நான்கு பள்ளி மாணவியர் உயிரிழந்தனர். இத்தகைய அசம்பாவிதங்களுக்கு சுற்றுலா பயணியரின் அலட்சியமும் காரணமாகும்.
தொலைவில் இருந்து வருவோருக்கு, கடலின் அபாயம் குறித்து தெரிவதில்லை. உள்ளூர் மக்கள், லைப் கார்டுகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், ஆர்வத்தில் கடலில் இறங்கி விளையாடுகின்றனர்.
கடற்கரைகளில் போலீஸ் கண்காணிப்பை பலப்படுத்தினால் மட்டுமே, இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

