உ.பி., வன்முறையில் கைதான மதகுரு ரசா கானின் கூட்டாளிகளுக்கு ரூ.1.25 கோடி அபராத நோட்டீஸ்
உ.பி., வன்முறையில் கைதான மதகுரு ரசா கானின் கூட்டாளிகளுக்கு ரூ.1.25 கோடி அபராத நோட்டீஸ்
ADDED : அக் 07, 2025 06:15 AM

பரேலி: உத்தர பிரதேசத்தில், வன்முறையை துாண்டியதாக கைதான முஸ்லிம் மதகுரு தவுகீர் ரசா கானின் நெருங்கிய கூட்டாளிகள் ஐந்து பேர், மின் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி, 1.25 கோடி ரூபாய் செலுத்தும்படி அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கான்பூர் மாவட்டத்தில் உள்ள ராவத்பூரில், கடந்த மாத துவக்கத்தில், மிலாது நபியையொட்டி, 'ஐ லவ் முகமது' என்ற வாசகம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதற்கு ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதை கண்டித்து, பரேலி மாவட்டத்தில் முஸ்லிம்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்ததில், அங்குள்ள கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
வன்முறையை துாண்டியதாக, இத்தேஹாத் - -இ- - மில்லத் கவுன்சில் தலைவரும், உள்ளூர் மதகுருவான தவுகீர் ரசா கான், அவரது நெருங்கிய கூட்டாளி நதீம் உட்பட, 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்தில், பரேலி மாவட்டத்தில் உள்ள பான் கானா பகுதியில் செயல்படும், 'இ - சார்ஜிங் ஸ்டேஷன்' எனப்படும், மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஐந்து நிலையங்களில் திருட்டு மின்சாரம் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.
இந்த ஐந்து நிலையங்களும், வன்முறையை துாண்டியதாக கைதான மதகுரு தவுகீர் ரசா கானின் நெருங்கிய கூட்டாளிகளான வசீம் கான், மோனிஷ் கான், பர்கான் ரசா கான், அமன் ரசா கான், குலாம் நபி ஆகியோருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.
வழக்குப் பதிந்த போலீசார், மின்சாரத்தை திருடி பயன்படுத்தியதற்காக, 1.25 கோடி ரூபாய் செலுத்தும்படி ஐந்து பேருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
அதிகபட்சமாக, பர்கான் ரசா கானுக்கு, 37.32 லட்சம் ரூபாய் அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஜனவரியிலும், இந்த ஐந்து பேர் மீது மின் திருட்டு புகார் பதியப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே தவறை செய்துள்ளதாக போலீசார் குறிப்பிட்டனர். இதில், மின்வாரிய ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்கப் பட்டு வருகிறது.