ADDED : ஜன 07, 2026 01:06 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 24 கோடி ரூபாய் அளவுக்கு, ஹவாலா மற்றும் ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபட்ட இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
உ.பி.,யின் பரேலி பகுதியை சேர்ந்த ஜரிகை வேலைப்பாடு செய்யும் கலைஞரின் வங்கிக் க ணக்கில், 1.50 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்தது குறித்து, வருமான வரித்துறையிடம் இருந்து அவருக்கு நோட்டீஸ் வந்தது.
இதையடுத்து, அவர் பரேலி போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்தி கைவினை கலைஞர் பெயரில் பண மோசடியில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர்.
இதுகுறித்து, பரேலி எஸ்.பி., அன்ஷிகா வர்மா கூறியதாவது:
கைவினை கலைஞர் பெயரில், 'சத்ய சஹாப் டிரேடர்ஸ்' என்ற பெயரில் போலி நிறுவனத்தை ஒரு மோசடி கும்பல் உருவாக்கி உள்ளது. அவரது பெயரில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் கணக்கு துவங்கி, அதில் பணப் பரிவர்த்தனை செய்துள்ளனர்.
இந்த கணக்குகள் மூலம் ஒரே ஆண்டில், 24 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பரிவர்த்தனை செய்துள்ளனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த கும்பல் போலியாக, 'மஹாவீர் டிரேடிங் கம்பெனி, மஹகால் டிரேடர்ஸ், சுமித் டிரேடர்ஸ்' உள்ளிட்ட சில நிறுவனங்களை போலியாக உருவாக்கியுள்ளனர்.
அவற்றின் பெயரில் ரசீதுகள் தயாரித்து ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபட்டுள்ளனர். உண்மையில் இது ஜி.எஸ்.டி., மோசடி போல் தெரிந்தாலும், மிகப் பெரிய ஹவாலா மோசடி நடந்துள்ளது. தற்போது பரேலியை சேர்ந்த சாஹித் அகமது, 38; அமித் குப்தா, 38; ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பல் சிறிய வர்த்தகர்கள் மற்றும் தினக்கூலிகளை குறிவைத்து, இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக, சிறு வர்த்தகர்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்த, கடன் பெற்று தருவதாக கூறியுள்ளனர். மேலும், ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட உதவுவதாகவும் கூறி, அவர்களது ஆதார் அட்டைகளை பெற்று வங்கிக் கணக்குகளை உருவாக்கி பணப் பரிவர்த்தனை செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

