எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.33 லட்சம் கோடி கடன்: பிரதமர் மோடி பெருமிதம்
எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.33 லட்சம் கோடி கடன்: பிரதமர் மோடி பெருமிதம்
ADDED : ஏப் 08, 2025 11:59 AM

புதுடில்லி: ''எந்த உத்தரவாதமும் இல்லாமல் நாட்டு சாமானிய மக்களுக்கு ரூ.33 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
சிறு, குறு தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் 'பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தால் பயன் அடைந்தவர்களை டில்லியில் பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: எந்த உத்தரவாதமும் இல்லாமல் நாட்டு சாமானிய மக்களுக்கு 33 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இன்று இந்திய இளைஞர்களிடம் தொழில்முனைவோர் திறன்கள் உள்ளன. அவர்களுக்கு ஒரு சிறிய உதவி கிடைத்தால், மிகப் பெரிய பலன்களை அடைகின்றனர். முத்ரா யோஜனா திட்டத்தில் அதிகபட்ச எண்ணிக்கையிலான பெண்கள் கடன் பெற்றுள்ளனர். மேலும் அவற்றை விரைவாக திருப்பிச் செலுத்துபவர்களாகவும் உள்ளனர். நாட்டின் இளைஞர்கள் அனைத்து துறையிலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
முத்ரா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகின்றன. பொதுவாக அரசாங்கத்தின் தன்மை என்ன? அவர்கள் ஒரு முடிவை எடுத்து, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, நாங்கள் இதைச் செய்வோம் என்று அறிவித்து, பின்னர் சிலரை அழைத்து விளக்கேற்றி திட்டத்தை தொடங்கி வைப்பார்கள் மக்களின் கருத்துகளை கேட்க மாட்டார்கள்.
இந்த அரசாங்கம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு திட்டத்தின் முடிவுகளை மதிப்பிடுகிறது. பயனாளிகளிடம் அவர்களின் அனுபவத்தைப் பற்றி நாங்கள் கேட்கிறோம், அதில் ஏதேனும் மாற்றம் கொண்டுவர வேண்டிய அவசியம் இருந்தால், சில மாற்றங்களை கொண்டு வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.