ஒரு 'சீட்'டுக்கு ரூ.7 கோடி பேரம்: காங்., மீது பா.ஜ., குற்றச்சாட்டு
ஒரு 'சீட்'டுக்கு ரூ.7 கோடி பேரம்: காங்., மீது பா.ஜ., குற்றச்சாட்டு
ADDED : மார் 04, 2026 03:43 AM

புதுடில்லி : ஹரியானா மாநில காங்., முன்னாள் நிர்வாகிக்கு, சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதற்கு 7 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகார், தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக நடந்த, 'வாட்ஸாப்' குறுஞ்செய்தி தகவல் பரிமாற்றத்தை ஹரியானா மாநில மகளிர் காங்., முன்னாள் நிர்வாகியின் கணவர் கவுரவ் குமார் வெளியிட்டிருப்பதாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம், சோனியா குடும்பம் ஊழலில் ஈடுபட்டதற்கான ஆரம்பகட்ட ஆதாரம் கிடைத்திருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
ஹரியானா மகளிர் காங்., முன்னாள் தலைவரின் பெயரை அவர் வெளியிடவில்லை. அதே சமயம் 2024 சட்டசபை தேர்தலின்போது காங்., சார்பில் போட்டியிட இந்த பேரம் நடந்ததா என்பதையும் அவர் விளக்கவில்லை.
இது குறித்து செய்தியாளர்களிடம் பிரதீப் பண்டாரி கூறியதாவது: தேர்தலில், காங்., சார்பில் போட்டியிட 7 கோடி ரூபாய் தர வேண்டும் என, அக்கட்சியின் பொதுச்செயலரும் எம்.பி.,யுமான பிரியங்கா வாத்ரா தன் தனி உதவியாளர் மூலம் கேட்டுள்ளார். இதில், காங்., மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் மற்றும் சுரேஷுக்கும் தொடர்பு இருக்கிறது.
சோனியா குடும்பம் இந்த குற்றச்சாட்டை இது வரை மறுத்து பேசவில்லை. இதன் மூலம், அவர்கள் இதை ஒப்புக் கொண்டனர் என தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., - எம்.பி.,யான சம்பித் பத்ரா கூறுகையில், “அரசியல் கட்சி என்ற அந்தஸ்தில் இருந்து, 'ஷாப்பிங் மால்' போல காங்., வசூலில் இறங்கிவிட்டது. அதிக பணம் கொடுப்பவருக்கே தேர்தலில் போட்டியிட 'சீட்' எனக்கூறி ஜனநாயகத்தை காங்., விற்று வருகிறது,” என சாடினார்.
மற்றொரு பா.ஜ., எம்.பி.,யான சுதான்ஷு திரிவேதி, “பஞ்சாப் முதல் கேரளம் வரை காங்கிரசின் கலாசாரம் ஊழல்மயமாகிவிட்டது,” என குற்றஞ்சாட்டியுள்ளார்.

