ADDED : நவ 13, 2024 12:25 AM

பெங்களூரு ; பா.ஜ., ஆட்சியின்போது, கல்யாண கர்நாடகா மண்டல மேம்பாட்டு ஆணையத்திற்கு விடுவிக்கப்பட்ட 300 கோடி ரூபாயில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுதிர்குமார் தலைமையில் அரசு குழு அமைத்துள்ளது. இது, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக பா.ஜ.,வை சேர்ந்தவர், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, 81. இவர் 2019 முதல் 2021 வரை முதல்வர் பதவியில் இருந்தார். அப்போது கல்யாண கர்நாடக மண்டல மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் மனித வளங்கள், விவசாயம் மற்றும் கலாசார சங்கம் உருவாக்கப்பட்டது. ஆணையத்திற்கு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
நிதியை முறைகேடு செய்ததாக எடியூரப்பா, கல்யாண கர்நாடக மண்டல மேம்பாட்டு ஆணையத்தின் தலைவரும், கலபுரகி முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான தத்தாத்ரேயா பாட்டீல் ரேவூர் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து விசாரிக்க வேண்டுமென, முதல்வர் சித்தராமையாவுக்கு, கல்யாண கர்நாடகா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அழுத்தம் கொடுத்து வந்தனர். இதையடுத்து, 300 கோடி ரூபாய் முறைகேடு பற்றி விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுதிர்குமார் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, நேற்று முன்தினம் அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நேரத்தில் கல்யாண கர்நாடக மண்டல மேம்பாட்டு ஆணையம் சார்பில், மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டன. அதிலும் முறைகேடுகள் நடந்ததாக தகவல் வெளியானதால், அதுபற்றி விசாரிக்கவும், விசாரணை அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் தாக்கல் செய்யவும், அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நேரத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, எடியூரப்பா, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு மீது விசாரணைக்கு உத்தரவிட, அரசுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையிலான, விசாரணை குழு பரிந்துரை செய்தது சமீபத்தில் தெரியவந்தது.
இந்நிலையில், எடியூரப்பா மீது இன்னொரு முறைகேடு குறித்து விசாரிக்க, அரசு குழு அமைத்து இருப்பது, அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.