டில்லி வந்தார் ரஷ்யா அதிபர் புடின்: விமான நிலையம் சென்று வரவேற்றார் பிரதமர் மோடி
டில்லி வந்தார் ரஷ்யா அதிபர் புடின்: விமான நிலையம் சென்று வரவேற்றார் பிரதமர் மோடி
ADDED : டிச 04, 2025 07:20 PM

புதுடில்லி: இரண்டு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இன்று (டிசம்பர் 04) இரவு டில்லி வந்தடைந்தார். விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி அவரை கட்டியணைத்து வரவேற்றார்.
ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது போர் துவங்குவதற்கு முன், 2021 டிசம்பரில் இந்தியா வந்தார். அதன்பின் 4 ஆண்டுகள் கழித்து இன்று டில்லி வருகிறார். விமான நிலையத்துக்கு சென்ற பிரதமர் மோடி, புடினை கட்டியணைத்து வரவேற்றார். விமான நிலையத்தில் புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர், டில்லியில் நடக்க உள்ள, 23வது இந்தியா- ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இன்று அவருக்கு பிரதமர் இல்லத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, திரவுபதி முர்முவையும், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் புடின் சந்திக்க உள்ளார்.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது ரஷ்யாவின் எஸ் - 400 வான் பாதுகாப்பு கவசம் முக்கிய பங்காற்றியது. இந்த சூழலில், இன்று ரஷ்ய அதிபர் இந்தியா வருகிறார். அவரது வருகை முன்னிட்டு இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
புடின் வருகையை முன்னிட்டு டில்லி விமான நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

