ADDED : மார் 10, 2024 06:32 AM

பெங்களூரு: ''லோக்சபா தேர்தலில் 'சீட்' கிடைக்காவிட்டால், என் மனது வலிக்கும்,'' என்று, பா.ஜ., - எம்.பி., சதானந்த கவுடா கூறி உள்ளார்.
பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜ., - எம்.பி., சதானந்த கவுடா. முன்னாள் முதல்வர். லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று, கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். ஆனால் ஆதரவாளர்கள் வலியுறுத்ததால், முடிவை திரும்ப பெற்றார்.
பெங்களூரு வடக்கு தொகுதி 'சீட்' மீண்டும் கிடைக்கும் என்று நம்பிக்கையில் உள்ளார். ஆனால் சதானந்த கவுடா உட்பட மூத்த எம்.பி.,க்கள் சிலருக்கு சீட் கிடைக்காது என்று, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் சூசகமாக தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் சதானந்த கவுடா நேற்று அளித்த பேட்டியில், ''பெங்களூரு வடக்கு தொகுதியில் வேறு யாருக்காவது 'சீட்' கொடுங்கள் என்று சொன்னேன். ஆனால் எனது தொகுதிக்கு உட்பட்ட, சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள் என்னை மீண்டும் போட்டியிட வலியுறுத்தினர்.
''இன்னும் 10 ஆண்டுகள் என்னால் அரசியலில் இருக்க முடியும். 'சீட்' கிடைக்காவிட்டால் மனது வலிக்கும். பா.ஜ., எனக்கு அனைத்தையும் கொடுத்து உள்ளது,''என்றார்.

