மஹா.,வில் ‛இண்டியா' கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: பிரச்னை இல்லை என்கிறார் சஞ்சய் ராவத்
மஹா.,வில் ‛இண்டியா' கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: பிரச்னை இல்லை என்கிறார் சஞ்சய் ராவத்
ADDED : ஜன 09, 2024 11:29 AM

மும்பை: மஹாராஷ்டிராவில் இண்டியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ், உத்தவ் சிவசேனா அணி, தேசியவாத காங்., ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று (ஜன.,9) பேச்சுவார்த்தை நடத்துகிறது. ‛‛எங்களுக்குள் 2, 3 இடங்கள் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம், மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை' என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்காக பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற்றாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‛இண்டியா' என்ற கூட்டணியை உருவாக்கின. இதில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா அணி, திரிணமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, திமுக, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேர்தல் நெருங்குவதால் தொகுதி பங்கீடு பற்றி இப்போதே கட்சிகள் பேச ஆரம்பித்துவிட்டன.
ஆனால், காங்கிரஸ் தேசிய கட்சியாக இருந்தாலும், எங்கள் மாநிலத்தில் நாங்களே பெரிய கட்சி, எனவே நாங்கள் ஒதுக்கும் இடங்களில் தான் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என திரிணமுல் காங்., தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அவ்வபோது கூறிவருகிறார். இதனால் தொகுதி பங்கீடு பிரச்னையால் லோக்சபா தேர்தல் வரை கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் மஹாராஷ்டிராவில் இண்டியா கூட்டணி சார்பில் இன்று (ஜன.,9) பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
பிரச்னை இல்லை
இது தொடர்பாக உத்தவ் சிவசேனா அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‛‛மஹாராஷ்டிராவில் தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க இன்று முக்கிய கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். காங்கிரஸ், சிவசேனா, என்சிபி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்கள் மாநிலத்தை பொருத்தவரையில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் எந்த பிரச்னையும் இல்லை. கூட்டணி கட்சிகளுக்கு 2, 3 இடங்கள் வேண்டுமானால் வேறுபாடுகள் இருக்கலாம், அது பற்றி விவாதிப்போம்'' என்றார்.