ADDED : மார் 09, 2024 12:22 AM
புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவாரின் பேரனுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான சர்க்கரை ஆலையை, அமலாக்கத்துறை நேற்று முடக்கியது.
தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் அணியின் தலைவர் சரத் பவார்.
இவரது பேரன் ரோஹித் பவார், 38, தேசியவாத காங்கிரசில் சரத் பவார் அணி எம்.எல்.ஏ.,வாக உள்ளார்; மேலும், பாராமதி அக்ரோ எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிறுவனத்தின் கீழ் அவுரங்காபாத் மாவட்டம், கன்னாட் பகுதியில் கன்னாட் எஸ்.எஸ்.கே., சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது.
இந்நிறுவனம் மஹாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி தொடர்பான ஊழல் வழக்கில் சிக்கியுள்ளது.
இந்த ஊழலில் நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை அமலாக்கத் துறை விசாரிக்கிறது.
இந்நிலையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கன்னாட் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான 161 ஏக்கர் நிலம், ஆலை, இயந்திரங்கள், கட்டடங்கள் என அனைத்தையும் முடக்கி அமலாக்கத்துறை நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

