யாரையும் காயப்படுத்தாதீர்கள்! ஸ்ரீசத்யசாய் பாபா பிறந்த நாள் விழாவில் ஆந்திரா கவர்னர் நெகிழ்ச்சி
யாரையும் காயப்படுத்தாதீர்கள்! ஸ்ரீசத்யசாய் பாபா பிறந்த நாள் விழாவில் ஆந்திரா கவர்னர் நெகிழ்ச்சி
UPDATED : நவ 24, 2024 08:29 AM
ADDED : நவ 23, 2024 07:34 PM

''இன்றைய உலகில் அனைவருக்கும் சேவை செய்யுங்கள். எப்போதும், யாரையும் காயப்படுத்தாதீர்கள் என்ற பகவானின் வார்த்தை, இப்போதைக்கு தேவை. மனித நேயத்துடன், அசைக்க முடியாத பக்தியுடன் இருக்கும் கோடிக்கணக்கான பக்தர்களின் இதயங்களில், ஒரு அன்பான தெய்வமாக, பகவானை பார்க்கிறேன்,'' என ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர் தெரிவித்தார்.
![]() |
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில், நேற்று காலை ஸ்ரீசத்ய சாய் பாபா 99வது பிறந்த நாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
![]() |
சாய் குல்வந்த் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக, ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர், ஆந்திர சுகாதாரம், மருத்துவ கல்லுாரி அமைச்சர் சத்யகுமார் யாதவ், சமூக நல அமைச்சர் சவிதா, புட்டபர்த்தி தொகுதி எம்.எல்.ஏ., பல்லே சிந்துாரா ரெட்டி, எஸ்.எஸ்.எஸ்.சி.டி., நாகானந்த் ஆகியோர் பேசினர்.
![]() |
*செயல்பாடுகள்
எஸ்.எஸ்.எஸ்.எஸ்.ஓ., ஏ.ஐ.பி., நிமிஷ் பாண்டியா, விழாவுக்கு வந்த பக்தர்களை பாராட்டி, நுாற்றாண்டு விழாவை நோக்கி செல்லும் எஸ்.எஸ்.எஸ்.எஸ்.ஓ.,வின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார்.
பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 99 வது பிறந்தநாளை குறிக்கும் வகையில், 99 கிலோ எடையுள்ள 'கேக்' வெட்டப்பட்டது.
பிரசாந்தி பஜனை குழுவினரின் 'குரு வந்தனம்' என்ற பக்தி பாடலுடன் கொண்டாட்டம் துவங்கியது.
![]() |
கவர்னர் அப்துல் நசீர் ஆற்றிய உரை:
அனைத்து மதங்களின் அமைதி, நல்லிணக்கத்தை மேம்படுத்தி லட்சக்கணக்கான பக்தர்களை சரியான பாதையில் வழிநடத்தும் ஒரு பிரகாசமான உதாரணம், பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா. நான் யாருடைய நம்பிக்கையையும் தொந்தரவு செய்யவோ அல்லது அழிக்கவோ வரவில்லை. ஆனால் ஒவ்வொருவரின் நம்பிக்கையை உறுதிப்படுத்த வந்து உள்ளேன் என்று பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா கூறினார். இதனால் ஒரு ஹிந்து சிறந்த ஹிந்துவாகவும், கிறிஸ்துவர் சிறந்த கிறிஸ்துவராகவும், முஸ்லிம்கள் சிறந்த முஸ்லிம்களாகவும் மாறுகின்றனர்.
![]() |
*வலுவான முழக்கம்
தன்னலமற்ற சேவை மற்றும் கல்வியின் மூலம் மாற்றம் வரும் என்ற முழக்கத்தை வலுவாக எடுத்து உரைத்தவர் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா. போரினால் சிதைந்து கிடக்கும் இன்றைய உலகில் அனைவருக்கும் சேவை செய்யுங்கள். எப்போதும் யாரையும் காயப்படுத்தாதீர்கள் என்ற பகவானின் வார்த்தை, இப்போதைக்கு தேவை. அந்த வார்த்தைகளால், பகவான் அன்பின் உருவகமாக திகழ்ந்தார்.
இதயத்தில் நீதி இருந்தால், குணத்தில் அழகு இருக்கும்; குணத்தில் அழகு இருந்தால் வீட்டில் நல்லிணக்கம் இருக்கும்; வீட்டில் நல்லிணக்கம் இருந்தால் நாட்டில் ஒழுங்கு இருக்கும்; நாட்டில் ஒழுங்கு இருந்தால் உலகில் அமைதி நிலவும். ஒரே ஜாதி மனிதகுலம் என்ற ஜாதி; ஒரே மதம் அன்பு மதம்; ஒரே மொழி இதயத்தின் மொழி. கடவுள் ஒருவரே... அவர் எங்கும் நிறைந்தவர். ஒருமைப்பாட்டின் அவசியம் இருக்க வேண்டும்.
பகவானின் புகழ்பெற்ற கொள்கைகளான 'அனைவரையும் நேசி - அனைவருக்கும் சேவை செய்' என்ற முக்கிய கொள்கை நினைவு கூறத்தக்கது.
மனித நேயத்துடன், அசைக்க முடியாத பக்தியுடன் செயல்படும் கோடிக்கணக்கான பக்தர்களின் இதயங்களில், ஒரு அன்பு தெய்வமாக, பகவானை பார்க்கிறேன். 'வசுதேவ குடும்பகம்' என்ற உலகம் ஒரே குடும்பம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் ஸ்ரீசத்ய குமார் யாதவ் பேசியதாவது:
சமூக மீட்டெடுப்பு, அதன் தொலைநோக்கு தாக்கத்துக்கு, பகவானின் மகத்தான பங்களிப்பு உள்ளது. தர்மாவரம், அதன் தொகுதியில், ராயலசீமா பகுதிக்கு சுவாமிகள், சுத்தமான குடிநீர் வழங்கிய போது, நான் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
குடிநீர் திட்டத்தின் பயனாளியாகவும், சுகாதார துறை அமைச்சராகவும், 'தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற அழைப்பை ஏற்று, சுற்றுச்சூழலை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மரங்களை வளர்க்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பகவானுக்கு மாணவ - மாணவியர், பக்தர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர், பிறந்த நாள் அட்டைகள், கேக்குகள் சமர்ப்பித்தனர். மாணவர் இசைக்குழு, இன்னிசையை இசைத்து மெருகேற்றியது.
5.25 லட்சம் அறுவை சிகிச்சைகள்
ஸ்ரீசத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாகி எஸ்.எஸ்.நாகானந்த் பேசியதாவது:
பெங்களூரு ஒயிட்பீல்டில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் கழகத்தை, ஸ்ரீசத்ய சாய் தலைமையில், 2001 ல் அன்றைய பிரதமர் வாஜ்பாய் திறந்து வைத்தார். இது ஏழைகளுக்கு சிறந்த, உயர்தர மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளை வழங்குகிறது. ஏழை நோயாளியின், இலவசமாக, ஜாதி, மதம் அல்லது தேசிய அடிப்படையில் எந்த பாகுபாடும் இல்லாமல் சிகிசசை அளிக்கப்படுகிறது. இது 333 படுக்கைகள் கொண்ட மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையாகும்.
பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபா, மனிதனுக்கு செய்யும் சேவை என்பது கடவுளுக்கு செய்யும் சேவை என்ற முழக்கத்துடன், அனைத்து நோயாளிகளுக்கும் இலவச மற்றும் தரமான சுகாதார சேவையை வழங்கும் நோக்கத்துடன் அறக்கட்டளையை நிறுவி உள்ளார்.
இம்மருத்துவமனையில், 2001 ஜனவரி முதல் 2023 நவம்பர் வரை, 76.33 லட்சம் சிகிச்சை பெற்றுள்ளனர்; 5.25 லட்சம் அறுவை சிகிச்சைகள், இலவசமாக செய்யப்பட்டு உள்ளன. கடந்த 22 ஆண்டுகளாக, தன்னலமற்ற சேவையில் மருத்துவமனை ஈடுபட்டுள்ளது. இதயவியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, நரம்பியல் உட்பட பல நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இங்கு சிகிச்சை பெற, நாடு முழுவதில் இருந்தும் நோயாளிகள் வருகை தருகின்றனர். அனைவருக்கும் தேவையான வசதிகளை, மருத்துவமனை நிர்வாகம் இலவசமாக அளித்து வருகிறது. மருத்துவமனைகளில் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி அனுப்பியிருந்த வாழ்த்து செய்தி:
புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில், ஸ்ரீ சத்ய பாபாவின் பிறந்த நாள் நுாற்றாண்டு விழா ஆரம்பமானது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்விழா, மனித குலத்துக்கான ஒரு வரம். இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அவரது எண்ணற்ற பக்தர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
பல நுாற்றாண்டுகளாக துறவிகள், 'ஏக் பாரத்... ஸ்ரேஸ்த பாரத்' என்ற உணர்வை ஊட்டி வளர்த்து வருகின்றனர். ஸ்ரீசத்ய சாய்பாபா போன்ற ஆன்மிக மேதைகளின் வழிகாட்டுதலில், சமூக நலனும், மக்கள் நலனில் மிகுந்த அக்கறையுமே முதன்மை வகிக்கிறது.
ஸ்ரீசத்ய சாய்பாபாவின் ஆன்மிக போதனைகளின் தனித்துவத்தை, அவரின் உள்ளார்ந்த எளிமையில் காணலாம். 'மனிதனுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவை'; 'அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய்', 'எப்போதும் உதவு, ஒருபோதும் காயப்படுத்தாதே' என்பது போன்ற அவரின் போதனைகள் மூலம் பிரதிலிக்கிறது.
உலகெங்கிலும் உள்ள சமூகங்களை ஏற்றுக்கொள்வது, கல்வி கற்பது மனித பண்புகளை உருவாக்குகிறது. தரமான, நவீன சுகாதாரம், 'ஸ்ரீ சத்யசாய் பிரேம தரு' திட்டத்தின் ஒரு பகுதியாக, பத்து லட்சம் மரங்களை நடுதல்; குடிநீர், நீர்ப்பாசனம் போன்ற தொண்டு பணிகள், என் மனதை தொட்டுள்ளது.
குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில், பகவான், மக்களுக்கு செய்த சேவையை பார்த்திருக்கிறேன். ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் அறிவுறுத்தலின்படி, ஆயிரக்கணக்கான மக்கள், மீட்பு பணிகளில் அயராது உழைத்து, உதவி செய்தனர்.
ஸ்ரீ சத்ய சாய்பாபா காட்டிய ஆன்மிகம், சேவையின் பாதையில் மேலும், மேலும் பயணிக்க, இந்த கொண்டாட்டங்கள் ஊக்கம் அளிக்கட்டும். பகவான் வாழ்க்கையும், செய்தியும் இளைஞர்கள், சமுதாயத்துக்கும் தேசத்துக்கும் சேவை செய்ய வழிகாட்டட்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார். - நமது நிருபர் -






