வட மாநிலங்களை வாட்டும் கடும் குளிர்: மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை
வட மாநிலங்களை வாட்டும் கடும் குளிர்: மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை
ADDED : ஜன 11, 2026 10:58 PM

புதுடில்லி: தலைநகர் டில்லி உட்பட வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த ஓரிரு நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறைந்த வெப்பநிலை
வட மாநிலங்களில் வழக்கமாக டிச., துவங்கி பிப்., மாதம் வரை குளிர் அதிகமாக இருக்கும். இந்தாண்டு வழக்கத்தைவிட குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும், டில்லி யூனியன் பிரதேசத்திலும், கடந்த சில நாட்களாக அடர்ந்த பனி நிலவுகிறது.இதனால், சாலைகளில் எதிரே வருபவர்கள் கூட அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
டில்லி சப்தர்ஜங் பகுதி யில் குறைந்தபட்சமாக 4.2 டி கிரி செல்ஷியஸ் வெப்பம் நேற்று பதிவானது.இது, குளிர் காலத்தில் டில்லியில் பதிவான குறைந்த வெப்பநிலை ஆகும். பாலம் பகுதியில் 4.5, லோடி சாலையில் 4.7, அயநகரில் 4.5 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை நேற்று பதிவானது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.அதிகாலை துவங்கி பிற்பகல் வரையிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சாலைகளில் ஆங்காங்கே ஒரு சிலர், தீயை மூட்டி குளிர்காய்ந்தபடி உள்ளனர்.
கடும் குளிரால் விமான சேவை எதுவும் பாதிக்கப்படாத நிலையில், பயணியர், முன்கூட்டியே விமான நிலையம் வர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.டில்லியில் இன்றும், நாளையும் பனிமூட்டம் மேலும் அதிகரிக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடர்ந்த பனி மற்றும் குளிர் அலை வீசக்கூடும் என்பதால், டில்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, டில்லி சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின், கோரக்பூரில் மாநிலத்திலேயே குறைந்தளவு வெப்பநிலையாக 7 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி உள்ளது. கோரக்பூர், நொய்டா பகுதிகளில் கடும் குளிர் காரணமாக, 8ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 15ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு
கடும் குளிர் மற்றும் சில்லிடும் காற்றால், பகல் நேரங்களிலேயே சாலைகளும், சந்தைகளும் மக்கள் நடமாட்டமின்றி காணப்படுகின்றன.வீடற்றவர்கள் தங்குவதற்காக அரசு சார்பில் இரவு நேரக் காப்பகங்கள் மற்றும் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மலை பிரதேசங்களான ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் வரலாறு காணாத வகையில் பனிப் பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. பல இடங்களில் உறைபனியும் காணப்படுகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக, ஒரு சில பகுதி களில் ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
அதிகாலையில், வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். சாலையோரம் வசிப்பவர்களை கடும் குளிரில் இருந்து காப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.வடமாநிலங்களில், வரும் நாட்களில் குளிர் மேலும் அதிகரிக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

