கிரிக்கெட் வீரர்களிடமிருந்து வந்த பாலியல் தொல்லை: மாஜி கிரிக்கெட் வீரரின் மகள் அதிர்ச்சி தகவல்
கிரிக்கெட் வீரர்களிடமிருந்து வந்த பாலியல் தொல்லை: மாஜி கிரிக்கெட் வீரரின் மகள் அதிர்ச்சி தகவல்
ADDED : ஏப் 18, 2025 04:43 PM

புதுடில்லி: '' கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து தனக்கு பாலியல் தொல்லை வந்தது ,'' என முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகள் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சஞ்சய் பங்கர். இவரது மகன் ஆர்யன், அறுவை சிகிச்சை மூலம் பாலினத்தை மாற்றிக் கொண்டார். தற்போது 23 வயதாகும் அவர் அனயா பங்கர் என பெயர் சூட்டிக் கொண்டார். இவரும் சிறு வயதில் கிரிக்கெட் விளையாடி உள்ளார்.
இந்நிலையில் அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: எனக்கு 8,9 வயதாக இருக்கும் போது என்னை பெண்ணாக உணர துவங்கினேன். தந்தை பிரபலமான நபர் என்பதால், என்னை பற்றி ரகசியமாக வைத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. சிறு வயதில், முஷீர்கான், சர்பராஸ் கான், ஜெய்ஸ்வால் போன்ற பிரபலமான கிரிக்கெட் வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடி உள்ளேன்.
பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு, ஆடைகளின்றி இருக்கும் போட்டோக்களை சில கிரிக்கெட் வீரர்கள் எனக்கு அனுப்பினர். ஒருவர், அனைவர் முன்பும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். பிறகு அருகில் வந்து என்னுடைய புகைப்படங்களை கேட்டார். இது குறித்து மூத்த வீரர் ஒருவரிடம் தெரிவித்த போது அவர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார். இவ்வாறு அவர் கூறினார்.