ADDED : அக் 27, 2024 11:11 PM

பெலகாவி: ''நான் முறைகேடு செய்துள்ளதாக, அமைச்சர் பைரதி சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார். தைரியம் இருந்தால் என்னை பற்றி ஆதாரங்களை வெளியிடட்டும்,'' என, சிறு குழு தொழில் துறை இணை அமைச்சர் ஷோபா சவால் விடுத்தார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நான், மாநில அரசில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த போது, ஊழல் செய்துள்ளதாகவும், 15 நாட்களுக்கு பின் ஆதாரங்களை வெளியிடுவதாகவும், நகர வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார். அவருக்கு தைரியம் இருந்தால் ஆதாரங்களை வெளியிடட்டும்.
'முடா' முறைகேடு தொடர்பான, ஆயிரக்கணக்கான கோப்புகளை பைரதி சுரேஷ், பெங்களூருக்கு கொண்டு வந்து எரித்துள்ளார். இது குறித்து நான் குரல் எழுப்பினேன். எனவே என் மீது குற்றம்சாட்டுகிறார்.
இந்த ஷோபா எப்போதும் ஊழல் செய்தது இல்லை. இனியும் செய்ய மாட்டேன்.
எனக்கு எதிரான ஆதாரங்களை வெளிப்படுத்த, பொன்னண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கும், மின்துறைக்கும் என்ன சம்பந்தம். போலியான ஆவணங்களை உருவாக்கும் பொறுப்பை, அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால் வெளியிடட்டும். மைசூரில் இருந்து பைரதி சுரேஷ், கோப்புகளை கொண்டு வந்தது உண்மை. அவற்றை எரித்ததும் உண்மை. முடா முறைகேடு குறித்து விசாரணை நடக்கிறது. மத்திய விசாரணை அமைப்பும், விசாரணையில் இறங்கியுள்ளது. முறைகேடு வெளிச்சத்துக்கு வரும் என்ற பீதியில், என் மீது குற்றம்சாட்டுகின்றனர்.
மாநிலத்தின் மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இவற்றில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். எங்களுக்கு பூத் அளவில் பலம் உள்ளது. நாங்கள் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

