ADDED : மார் 13, 2024 12:05 AM
பெங்களூரு : தேர்தல் பணிக்கு பி.டி.ஓ., என்ற பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர்களை நியமிக்கக் கூடாது என்ற பஞ்சாயத்துராஜ் துறையின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் தலைமை செயலர் உமா மஹாதேவன், கடந்த பிப்., 16ம் தேதி, மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், 'பி.டி.ஓ.,க்கள் தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டால், குடிநீர் வினியோகம் உட்பட வறட்சி மேலாண்மை பணிகளுக்கு இடையூறு ஏற்படும். பொதுமக்கள் பிரச்னைகளுக்கு பதில் அளிப்பது கடினமாகி விடும். எனவே குறுகிய கால தேர்தல் பணிகளுக்கு மட்டும், அவர்களை நியமிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இதை பரிசீலித்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி, கடந்த 2ம் தேதி, மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், 'பி.டி.ஓ.,க்களுக்கு நீண்ட கால தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். குறுகிய நேரம் மட்டுமே தேர்தல் பணியில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

