தலைமை நீதிபதி மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின், சோனியா கண்டனம்
தலைமை நீதிபதி மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின், சோனியா கண்டனம்
UPDATED : அக் 06, 2025 06:23 PM
ADDED : அக் 06, 2025 05:21 PM

சென்னை: '' சுப்ரீம் கோர்ட் வளாகத்திற்குள் தலைமை நீதிபதி கவாய்க்கு எதிராக நடத்தப்பட்ட வெட்கக்கேடான செயல், நமது நீதித்துறை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இதனை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். காங்கிரஸ் எம்பி சோனியாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி கவாயை, ராஜேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் தாக்க முயன்றார். கவாய் மீது காலணியை வீச முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். ராஜேஷ் கிஷோரை, சஸ்பெண்ட் செய்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சுப்ரீம் கோர்ட் வளாகத்திற்குள் தலைமை நீதிபதி கவாய்க்கு எதிராக நடத்தப்பட்ட வெட்கக்கேடான செயல், நமது ஜனநாயகத்தின் உயர்ந்த நீதித்துறை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். தலைமை நீதிபதி வெளிப்படுத்திய கருணை, அமைதி மற்றும் பெருந்தன்மை நீதித்துறை அமைப்பின் வலிமையை காட்டுகிறது. ஆனால், இந்த சம்பவத்தை எளிதாக எடுத்து கொள்ளக்கூடாது.
தாக்குதல் நடத்தியவர் தனது செயலுக்கான காரணத்தை வெளிப்படுத்தி இருப்பது, நமது சமூகத்தில் அடக்குமுறை மற்றும் அதிகார மனநிலை இன்னும் எவ்வளவு ஆழமாக நீடிக்கிறது என்பதைக் காட்டுகிறது. நமது நிறுவனங்களை மதித்து பாதுகாக்கும் மற்றும் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சோனியா கண்டனம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி கவாய் மீது நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வார்த்தைகள் இல்லை. இது அவர் மீதான தாக்குதல் அல்ல. அரசியலமைப்பு மீதான தாக்குதல். கவாய் கருணை உள்ளவர். இந்த நேரத்தில் தேசம் அவருக்க ஆதரவாக உறுதியுடன் நிற்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.