ADDED : செப் 28, 2024 05:51 AM

புதுடில்லி: ஐ.என்.எஸ்., எனப்படும், 'இந்திய செய்தித்தாள் சொசைட்டி'யின் 2024 --- 25ம் ஆண்டுக்கான தலைவராக, 'மாத்ருபூமி' நாளிதழின் நிர்வாக இயக்குனர் எம்.வி.ஷ்ரேயாம்ஸ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.என்.எஸ்., எனப்படும், இந்திய செய்தித்தாள் சொசைட்டியில், தேசிய அளவில் 800 பத்திரிகைகள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றன. இந்த சொசைட்டியின் 85வது ஆண்டு பொதுக்கூட்டம், நேற்று வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்தது.
இக்கூட்டத்தில், 2024 --25ம் ஆண்டுக்கான தலைவராக 'மாத்ருபூமி' நாளிதழின் நிர்வாக இயக்குனர் எம்.வி.ஷ்ரேயாம்ஸ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.
துணைத் தலைவராக, 'சன்மார்க்' ஹிந்தி நாளிதழின் விவேக் குப்தா; உதவித் தலைவராக லோக்மாத் நாளிதழின் கரண் ராஜேந்திர தர்தா, கவுரவப் பொருளாளராக, 'அமர் உஜாலா' நாளிதழின் தன்மய் மகேஸ்வரி, பொதுச்செயலராக மேரிபால் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த சொசைட்டியின், 41 பேர் அடங்கிய செயற்குழுவில், பாலசுப்ரமணியன் ஆதித்யன் - குழுமத் தலைவர், தினத்தந்தி; டாக்டர் ஆர்.லட்சுமிபதி -- இணை நிர்வாக ஆசிரியர், தினமலர் நாளிதழ்; இல. ஆதிமூலம் - - ஆசிரியர்,ஹெல்த் அண்டு தி ஆன்டிசெப்டிக்; ஆர்.எம்.ஆர்., ரமேஷ் - ஆசிரியர், தினகரன்; வெங்கட் - இயக்குனர், ஈநாடு உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.