ADDED : நவ 01, 2024 07:03 AM
ஒயிட்பீல்டு: தாக்குதல் வழக்கில் கைது செய்ய புகார்தாரரிடம் 25,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, எஸ்.ஐ., கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு வர்த்துார் அருகே முட்டசந்திரா கிராமத்தில் வசிப்பவர் அம்பரிஷ். இவரை, முன்விரோதம் காரணமாக கடந்த 24ம் தேதி நான்கு பேர் தாக்கினர்.
இதுகுறித்து ஒயிட்பீல்டு போலீசில் புகார் செய்தார். நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவானது. அவர்கள் தலைமறைவாகினர்.
இந்நிலையில் ஒயிட்பீல்டு போலீஸ் நிலையம் சென்ற புகார்தாரர், தன் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எஸ்.ஐ., கங்காதரய்யா, புகார்தாரரிடம், “50,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால், தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்வோம்,” என்று கூறினார். பின்னர் நடந்த பேச்சில் லஞ்சம் 25,000 ரூபாயாக குறைக்கப்பட்டது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத புகார்தாரர், பெங்களூரு நகர லோக் ஆயுக்தா போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார்.
நேற்று முன்தினம் இரவு போலீஸ் நிலையம் அருகே உள்ள, காலி நிலத்தில் கங்காதரய்யாவை, புகார்தாரர் சந்தித்து பணம் கொடுத்தார். அப்போது அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார் கங்காதரய்யாவை கையும் களவுமாக கைது செய்தனர்.

