எஸ்.ஐ., தேர்வு முறைகேடு 'மாஜி' ஏ.ஜி.டி.பி., உள்ளிட்ட இருவரின் சொத்து பறிமுதல்
எஸ்.ஐ., தேர்வு முறைகேடு 'மாஜி' ஏ.ஜி.டி.பி., உள்ளிட்ட இருவரின் சொத்து பறிமுதல்
ADDED : ஜன 25, 2026 05:31 AM

பெங்களூரு: போலீஸ் எஸ்.ஐ., தேர்வு முறைகேடு தொடர்பாக, ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் ஏ.டி.ஜி.பி., அம்ரித்பால் உள்ளிட்ட இருவரின், 1.53 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கர்நாடகாவில், 2021 - 22ல், 545 எஸ்.ஐ., பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய நடந்த தேர்வில், முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஹைகிரவுண்ட் போலீசில் வழக்கு பதிவானது. இவ்வழக்கை சி.ஐ.டி.,யினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதன்அடிப்படையில், ஈ.டி., எனும் அமலாக்க துறையும் விசாரணை நடத்தி வந்தது. 2022ல், அம்ரித்பால் வீட்டிலும் ரெய்டு நடத்தி, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின், அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த முறைகேட்டில், அம்ரித்பாலுக்கு முக்கிய பங்கு இருப்பதை உறுதி செய்தனர். பாதுகாப்பு அறையில் இருந்த விடைத்தாள்களை திருத்தியதும் உறுதி செய்யப்பட்டது.
இதற்காக, ஒவ்வொரு தேர்வரிடம் இருந்தும் தலா, 30 முதல் 70 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இந்த பணத்தின் மூலம், அம்ரித் பால், தலைமை ஏட்டு ஸ்ரீதர் ஆகியோர் குடியிருப்பு மனைகள் வாங்கி உள்ளனர்.
இதுதொடர்பாக அமலாக்கத்துறையினர் ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளனர். நீதி மன்றமும் இதை சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்று உறுதிபடுத்தியது.
அதனால், அம்ரித்பால், தலைமை ஏட்டு ஸ்ரீதர் ஆகியோருக்கு சொந்தமான, 1.53 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, கடந்த, 23ம் தேதி அமலாக்க துறையினர் பறிமுதல் செய்தனர்.

