ஜப்பான், பிரிட்டனில் மந்தநிலை இந்தியாவுக்கு பெரும் வாய்ப்பு
ஜப்பான், பிரிட்டனில் மந்தநிலை இந்தியாவுக்கு பெரும் வாய்ப்பு
ADDED : பிப் 18, 2024 01:26 AM

புதுடில்லி, ஜப்பான் மற்றும் பிரிட்டனில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து வளர்ந்து வரும் பெரும் பொருளாதாரமாக உள்ள இந்தியாவுக்கு பெரும் வாய்ப்புகள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெரும் பின்னடைவு
தற்போது, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்ததாக, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 2023 நான்காவது காலாண்டில், பொருளாதார வளர்ச்சி, மைனஸ் 0.3 சதவீதமானது.
இதையடுத்து பொருளாதார மந்தநிலைக்கு அந்த நாடு தள்ளப்பட்டுஉள்ளது. இந்தாண்டு இறுதியில் பொதுத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், பிரதமர் ரிஷி சுனக்கிற்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, உலகின் மிகப் பெரும் பொருளாதார நாடாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆசிய நாடான ஜப்பானும், பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகின்றன.
தற்போது உலகின் பெரும் பொருளாதாரத்தில், ஜெர்மனிக்கு அடுத்ததாக நான்காவது இடத்துக்கு ஜப்பான் தள்ளப்பட்டுள்ளது.
ஜெர்மனியும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ரஷ்யா -- உக்ரைன் போரால், எரிபொருள் விலை உயர்வால், ஜெர்மனியின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கி வட்டியை உயர்த்தியுள்ளது, போதுமான தொழிலாளர் இல்லாதது போன்றவை ஜெர்மனிக்கு பெரிய பாதிப்பாக உள்ளது.
இந்நிலையில், இந்தி யாவின் மீது உலகின் பார்வை திரும்பியுள்ளது. தற்போது, 6.2 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன், உலகின் மிகவும் வேகமான பொருளாதார வளர்ச்சி உள்ள நாடாக இந்தியா தொடர்கிறது.
இந்தியா முந்தும்
தற்போதுள்ள நிலையில், பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில், 2026ல் ஜப்பானையும், 2027ல் ஜெர்மனியையும் இந்தியா முந்தும் என, கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உலக நாடுகள் பலவும், முதலீடு களுக்காக இந்தியாவை குறிவைத்துள்ளன. இதன் வாயிலாக பல புதிய வாய்ப்புகள் இந்தியாவுக்கு கிடைக்க உள்ளதாக, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.