சித்தராமையாவிடம் விசாரணை நடத்த போலீசில் ஸ்நேகமயி கிருஷ்ணா மனு
சித்தராமையாவிடம் விசாரணை நடத்த போலீசில் ஸ்நேகமயி கிருஷ்ணா மனு
ADDED : அக் 15, 2024 05:57 AM

மைசூரு: 'முடா' முறைகேடு வழக்கில், முதல்வர் சித்தராமையாவை கைது செய்து விசாரணை நடத்தும்படி, புகார்தாரர் ஸ்நேகமயி கிருஷ்ணா, லோக் ஆயுக்தா போலீசில் நேற்று மனு அளித்தார்.
'முடா' முறைகேடு தொடர்பாக சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா கொடுத்த புகாரின் அடிப்படையில், முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுனா, நிலம் விற்ற தேவராஜ் ஆகியோர் மீது, லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கடந்த வாரம் மல்லிகார்ஜுனா, தேவராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. முதல்வர், அவரது மனைவியிடம் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. இதனால் கோபமடைந்த புகார்தாரர் ஸ்நேஹமயி கிருஷ்ணா, லோக் ஆயுக்தா போலீசில் நேற்று ஒரு மனுவை வழங்கி, முதல்வரை வரவழைத்து விசாரணை நடத்தும்படி கோரினார்.
பின், அவர் கூறியதாவது:
முறைகேட்டில் முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக, 25 பக்க ஆவணங்களை லோக் ஆயுக்தா போலீசில் தாக்கல் செய்துள்ளேன். உயர் நீதிமன்றத்தில் சில தகவலை, முதல்வர் மறைத்துவிட்டார்.
தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், எனக்கு எதிராக மறைமுகமாக பேசுகிறார். இதனால் எனக்கும், என் குடும்பத்தினருக்கு பயம் ஏற்பட்டுள்ளது. முதல்வரிடம் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை.
எனவே முதல்வரை கைது செய்து விசாரணை நடத்தும்படி, போலீசில் வலியுறுத்தி உள்ளேன். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லட்சுமண், அடிக்கடி லோக் ஆயுக்தா போலீஸ் அலுவலகத்துக்கு வருகிறார்.
அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து, வழக்கின் திசையை திருப்ப முயற்சிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே சிசிடிவி கேமராக்கள் பொருத்தும்படி வலியுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.