ADDED : ஜன 26, 2026 01:59 AM

பந்திபோரா: ஜம்மு - காஷ்மீரில் பலத்த காற்றுடன் வீசிய பனிப்புயலால், 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு ஸ்ரீநகர், பத்காம், பாரமுல்லா, குப்வாரா, சோபியான், புல்வாமா, பந்திபோரா உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இந்நிலையில், பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஸ், துலைல் ஆகிய பகுதிகளில், கடந்த 23ம் தேதி மாலை துவங்கிய பனிப்புயல், நேற்று முன்தினம் காலை வரை வீசியது.
பலத்த காற்றுடன் வீசிய இந்த பனிப்புயலால், குரேஸ், துலைல் உள்ளிட்ட பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்தன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இது குறித்து, பந்திபோரா துணை கமிஷனர் இந்து கன்வால் சிப் கூறுகையில், “பனிப்புயலால் 100 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. பாதிப்புகளை கணக்கிடும் பணி தொடர்ந்து நடக்கிறது.
''விரிவான ஆய்வுக்கு பிறகே முழுமையான சேத விபரங்கள் தெரிய வரும். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை,” என்றார்.
ஜம்மு - -காஷ்மீரில், கடந்த சில நாட்களாக நிலவும் பனிப்பொழிவால், ஸ்ரீநகர்- - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. மேலும், மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கான யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

