ADDED : மார் 02, 2024 04:32 AM

தார்வாட் : ''நாட்டின் அனைத்து அரசு அலுவலகங்களின் கூரையிலும், 2025க்குள் சோலார் பேனல்கள் பொருத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது,'' என, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறினார்.
தார்வாடில் உள்ள ஐ.ஐ.டி., என்ற இந்திய தொழில்நுட்ப கழகத்தில் அறிவ வள-தரவு மையம் மற்றும் மத்திய கற்பித்தல் கட்டடத்தை, 'ரிமோட்' மூலம் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் திறந்து வைத்தார்.
அவர் பேசியதாவது:
சூரிய ஆற்றல் துறையில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. தற்போது, 72,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது இந்தியாவின் துணிச்சலான நடவடிக்கை.
ஐ.ஐ.டி.,யின் தார்வாடுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு, ஐ.சி.டபிள்யூ.ஏ., என்ற இந்திய உலக விவகார கவுன்சில் இயக்குனருக்கு அறிவுறுத்துவேன். இந்த செயல்முறையை மார்ச் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
மாணவர்கள்
ஐ.சி.டபிள்யூ.ஏ., என்பது உலகளாவிய அமைப்பாகும். உலகின் செயல்பாடுகளை பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள உதவுகிறது. தார்வாட் ஐ.ஐ.டி., மாணவர்கள், புதுடில்லி சென்று சென்ட்ரல் விஸ்டா கட்டடத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நாட்டின் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னணியில் உள்ளனர். கடந்தாண்டு செப்டம்பரில் லோக்சபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
மூன்றில் ஒரு பங்கு
இதன் மூலம் லோக்சபா, ராஜ்யசபாவில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு கிடைக்கும்.
இது 2030ல் நனவாகும். அனைத்து சட்டம், கொள்கை உருவாக்கத்திலும் பெண்கள் பங்கேற்பர்.
நாடு முன்னேறி வருவதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தேசம், தேசியவாதத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
தேசியவாதத்திற்கான அர்ப்பணிப்பு எந்த சூழ்நிலையிலும் மாறக்கூடாது. 'தேசம் முதலில்' என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
சுதந்திரத்தின் நுாற்றாண்டுக்குள் இந்தியாவை உலகின் 'நம்பர் 1' நாடாக மாற்ற வேண்டும். இந்த பணியின் 'சாவி' உங்கள் கையில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஐ.ஐ.டி., என்ற இந்திய தொழில்நுட்ப கழகத்தில் அறிவ வள-தரவு மையம் மற்றும் மத்திய கற்பித்தல் கட்டடத்தை, 'ரிமோட்' வாயிலாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் திறந்து வைத்தார். உடன் கவர்னர் தாவர்சந்த் கெலாட், மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி. இடம்: தார்வாட்

