சோமண்ணாவுக்கு ராஜ்யசபா பதவி ஆட்பேசனை இல்லை என்கிறார் அசோக்
சோமண்ணாவுக்கு ராஜ்யசபா பதவி ஆட்பேசனை இல்லை என்கிறார் அசோக்
ADDED : ஜன 14, 2024 11:33 PM
பெங்களூரு: ''முன்னாள் அமைச்சர் சோமண்ணாவுக்கு, கட்சி மேலிடம் ராஜ்யசபா பதவி வழங்குவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,'' என எதிர்க்கட்சி தலைவர் அசோக் தெரிவித்தார்.
புதுடில்லியில் பா.ஜ., மேலிட தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, முன்னாள் அமைச்சர் சோமண்ணா நேற்று முன்தினம் சந்தித்தார்.
இது தொடர்பாக, பெங்களூரில் நேற்று அசோக் அளித்த பேட்டி:
கட்சி மேலிட தலைவர்களை சந்தித்த பின், விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன், என்னை தொடர்பு கொண்டார். எல்லாம் நன்றாக முடிந்தது. ஒன்றும் பிரச்னை இல்லை. அனைவரும் கட்சியில் ஒன்றாக பணியாற்றுவோம். லோக்சபா தேர்தலில் மோடியை மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
அமித் ஷாவிடம் சோமண்ணா என்ன பேசினார் என்று தெரியவில்லை. இதை ஊடகத்தின் மூலமே பார்த்தேன். என்னிடம் பேசும் போது, ராஜ்யசபா பதவி குறித்து குறிப்பிட்டார். மேலிட தலைவர்கள் ஒப்புக் கொண்டதால், நாங்கள் எந்த கருத்தும் கூறவில்லை.
கடந்த முறை தெற்கில் இருந்து யாத்திரையை ராகுல் துவக்கினார். தென் மாநிலத்தில் இருந்து பயணத்தை துவக்கிய அவர், வடக்கில் மூன்று மாநிலங்களில் தோல்வி அடைந்தார்.
காங்கிரஸ் எங்கு பேரணி நடத்தினாலும், அக்கட்சியின் தோல்வி ஆரம்பமாகும். சர்வாதிகாரத்தை கொண்டு வந்தவர்கள், எமர்ஜென்சியை கொண்டு வந்தவர்கள், நீதித்துறை, பத்திரிகைகளை ஒடுக்கியவர்கள், நியாய யாத்திரை செல்கின்றனர். நீதி கேட்க அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது.
ராமர் கோவில் கட்டுவதை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
ஏன் அங்கு செல்ல வேண்டும். ராமர் அங்கு இல்லை. பின் ஏன் அங்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார். ராமர் கோவில் விவகாரத்தில் சித்தராமையாவின் நடத்தையை கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.