ADDED : ஜன 05, 2025 10:57 PM
சூர்யா நகர்: பெங்களூரு ரூரல், ஆனேக்கல்லின், சூர்யா சிட்டி அருகில் உள்ள ஹளே சந்தாபுராவில் வசிப்பவர் மஞ்சண்ணா, 46. இவரது மனைவி லட்சுமிதேவி, 41. தம்பதியின் மகன் ரமேஷ், 21.
சித்ரதுர்கா, செல்லகெரேவின் சிக்கஹள்ளி கிராமத்தை சேர்ந்த இக்குடும்பத்தினர், சில ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி பெங்களூரு வந்து, சந்தாபுராவில் வாடகை வீட்டில் வசிக்க துவங்கினர். லட்சுமி தேவி கூலி வேலை செய்து வந்தார். இவரது கணவர் செக்யூரிட்டியாக பணியாற்றுகிறார்.
இவர்களின் மகன் ரமேஷுக்கு, வலிப்பு நோய் இருந்தது. இவருக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். ஆனால் இவர் மருந்து, மாத்திரைகளை சரியாக சாப்பிடுவது இல்லை. கிடைத்த வேலைகளை செய்து, ஊரை சுற்றி வந்தார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான ரமேஷ், தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து, தாயுடன் தகராறு செய்வார். நேற்று முன்தினம் இரவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வழக்கம் போன்று தாயுடன் தகராறு செய்தார்.
வாக்குவாதம் முற்றியதால் கோபமடைந்த ரமேஷ், மொபைல் சார்ஜிங் ஒயரால், தாயின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின், தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணி முடிந்து வீட்டுக்கு வந்த மஞ்சண்ணா, மனைவியும், மகனும் இறந்து கிடப்பதை பார்த்து கூச்சலிட்டார். அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த சூர்யாநகர் போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்து, இரண்டு உடல்களையும் மீட்டனர்.
பெங்களூரு ரூரல் கூடுதல் எஸ்.பி., நாகேஷ் குமார், நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். சூர்யாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

