பஞ்சாப் டி.ஜி.பி., உட்பட மூன்று அதிகாரிகளுக்கு நோட்டீஸ் 48 மணி நேரத்தில் பதில் அளிக்க சபாநாயகர் உத்தரவு
பஞ்சாப் டி.ஜி.பி., உட்பட மூன்று அதிகாரிகளுக்கு நோட்டீஸ் 48 மணி நேரத்தில் பதில் அளிக்க சபாநாயகர் உத்தரவு
ADDED : ஜன 11, 2026 02:39 AM

புதுடில்லி: டில்லி சட்டத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்திருப்பது குறித்து, 48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்குமாறு, பஞ்சாப் மாநில டி.ஜி.பி., உட்பட மூன்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டில்லி சட்டசபை சபாநாயகர் விஜேந்தர் குப்தா, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து, சபாநாயகர் விஜேந்தர் குப்தா, நிருபர்களிடம் கூறியதாவது:
சீக்கிய மதகுரு தேவ்பஹதுார் 350வது தியாக தினத்தை முன்னிட்டு டில்லி அரசு சார்பில், செங்கோட்டை வளாகத்தில் நவம்பரில் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சர்ச்சை கருத்து
சட்டசபை குளிர்கால கூட்டத் தொடரில், இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய ஆம் ஆத்மியை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி சிங், சீக்கிய குரு தேவ் பஹதுார் குறித்து சர்ச் சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.
அவர் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், சட்ட சபையில் ஆதிஷி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், அடுத்த நாள் முதல் அவர் சபைக்கு வரவில்லை.
சட்ட சபையில் ஆதிஷி பேசிய வீடியோ மற்றும் ஆடியோ தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, சட்ட சபை உரிமை மீறல் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டசபையில் இந்த நிகழ்வு குறித்து, சட்டத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா உள்ளிட்ட சிலர் மீது, ஜலந்தர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இது, டில்லி சட்ட சபையின் சிறப்புரிமைகளை மீறும் செயல். சட்ட சபையின் மாண்பை காயப்படுத்தியுள்ளது. இதற்கு, அடுத்த 48 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி பஞ்சாப் டி.ஜி.பி., சைபர் கிரைம் சிறப்பு டி.ஜி.பி., மற்றும் ஜலந்தர் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
பிரத்யேக சொத்து
சட்ட சபை நடவடிக்கைகளின் எந்தவொரு பதிவும் சட்டசபையின் பிரத்யேக சொத்து. அது எந்த அரசியல் கட்சி, தனிநபர் அல்லது வெளி நிறுவனத்துக்கு சொந்தமானது அல்ல.
இந்த விவகாரத்தில் பஞ்சாப் போலீஸ் எந்த அடிப்படையில், எந் த அதிகாரத்தின் கீழ், அமைச்சர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தது?
சட்ட சபையின் அதிகாரப்பூர்வ பதிவை, திருத்தப்பட்டது அல்லது திரிக்கப்பட்டது என்று விமர்சிப்பது சட்டசபையின் கண்ணியத்தின் மீதான நேரடித் தாக்குதல். இது, பொய்யான குற்றச்சாட்டு மட்டுமல்ல; சட்ட சபையின் கவுரவத்தை குறைத்து மதிப்பிடும் செயல்.
சட்ட சபை தன் உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் எப்படி பாதுகாப்பது என்பதை அறிந்திருக்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் அதன் கண்ணியம், சொத்துக்கள் அல்லது அரசியலமைப்புப் புனிதத்தன்மை விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளாது.
இந்த விவகாரத்தில் ஜலந்தர் போலீஸ் கமிஷனரின் செயல் மிகவும் கேள்விக்குரியது. எனவே, அவர் மீது சட்ட சபை சிறப்புரிமை மீறல் வழக்கு நேரடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று அதிகாரிகளும் பதில் அனுப்பியவுடன், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ் வாறு அவர் கூறினார்.
புகார்
டில்லி சட்ட சபையில் ஆதிஷி சிங், சீக்கிய குரு தேவ் பஹதுார் குறித்து பேசிய வீடியோவை, சமூக வலைதளத்தில் அமைச்சர் கபில் மிஸ்ரா பதிவிட்டு இருந்தார். அதை பலர் பகிர்ந்து இருந்தனர்.
இதையடுத்து, ஆம் ஆத்மி கொடுத்த புகார்படி, திருத்திய உருவாக்கிய வீடியொவை வெளியிட்டதாக கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது ஜலந்தர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

