நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் தமிழக டி.ஜி.பி., பதில்
நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் தமிழக டி.ஜி.பி., பதில்
ADDED : பிப் 01, 2026 09:45 PM

புதுடில்லி; மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக, அவதூறு கருத்துகளை பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக டி.ஜி.பி., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் முருகபெருமானின் அறுபடை வீடுகளில், முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கடந்த கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இதனால், ஆவேசமடைந்த தி.மு.க., - காங்., - சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மத ரீதியாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்தது.
இந்தச் சூழலில், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக, ஜாதி மற்றும் மத ரீதியில் அவதுாறு கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் மணி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், இதற்கு பதில் அளிக்க கேட்டு தமிழக அரசு, தமிழக டி.ஜி.பி.,சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் பிறப்பித்தனர். இதைத் தொடர்ந்து தமிழக டி.ஜி.பி., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
எக்ஸ் வலைதள பதிவுகள், முகநூல், யுடியூப், வாட்ஸ் அப் மற்றும் பிற டிஜிட்டல் தளங்கள் போன்ற சமூக ஊடகங்களில் அவதூறான, இழிவான மற்றும் புண்படுத்தும் பதிவுகளை சில அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் பரப்பி உள்ளனர் என்று மனுதாரர் வேண்டும் என்றே குற்றம்சாட்டி உள்ளார்.
மனுதாரரின் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஆட்சேபனை கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படும் சமூக ஊடகப்பதிவுகள், அதன் கணக்குகளின் விவரங்களை மனுதாரர் வழங்கவில்லை. இருப்பினும், சைபர் குற்றப் பிரிவானது, சமூக ஊடகங்களில் அந்த ஆட்சேபனை கருத்துகள், பதிவுகள், அதன் உள்ளடக்கங்களை தேடி சரிபார்த்து நடவடிக்கை எடுத்துள்ளது.
அவதுாறு பரப்பும் வகையிலான புத்தகங்களோ, சுவரொட்டிகளோ, அறிக்கைகளோ வெளியிடக் கூடாது என்றும், அதை உறுதி செய்யுமாறு மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எக்ஸ் வலைதளம், முகநூல், யுடியூப், மற்றும் பிற தளங்களில் 9 சமூக ஊடக கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பிட்ட உள்ளடகத்தை அகற்ற, ஆள்மாறாட்டம் கணக்குகளை முடக்குமாறும், அசல் இணைய முகவரியையும், அதை பயன்படுத்தும் பயனர்களின் விவரங்களை அனுப்புமாறும் கோரப்பட்டுள்ளது.
ஆட்சேபனைக்குரிய முகநூல் பக்கத்தில் யுஆர்எல் எனப்படும் (URL) இணையத்தில் உள்ள இணைப்பு முகவரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முகநூலில் 14 யுஆர்எல்களும், எக்ஸில் 16 யுஆர்எல்களும், அடையாளம் காணப்பட்டு அதன் உள்ளடக்கத்தை தடுக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டன. இவற்றில் முகநூலில் உள்ள 4 யுஆர்எல்கள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ளவை இன்னமும் முடக்கப்படவில்லை.
தடை செய்யப்பட்ட, மேலும் இழிவான உள்ளடக்கங்கள் பரவுவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மீறல்கள் கண்டறியப்படும் போதெல்லாம் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொது அமைதியை பேண, சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்ய, நீதித்துறையின் கண்ணியம் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க, போலீசாரால் உடனடி மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

