ADDED : டிச 07, 2024 02:02 AM
சத்ராபூர், மத்திய பிரதேசத்தில் தன்னை திட்டிய அரசு பள்ளி முதல்வரை, நாட்டு துப்பாக்கியால் பிளஸ் 2 மாணவர் சுட்டு கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், சத்ராபூரில் தமோரா அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் முதல்வராக பணியாற்றியவர் சக்சேனா, 55. நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்திருந்த இவரை, பிளஸ் 2 மாணவர், மற்றொரு மாணவனுடன் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர்.
துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் அலறியடித்து வெளியே வந்து பார்த்தபோது, பள்ளி முதல்வர் நெற்றியில் குண்டு பாய்ந்து உயிரிழந்திருந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சத்ராபூர் மாவட்ட எஸ்.பி., அகம் ஜெயின் சம்பவம் நடந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
அவர் கூறுகையில், “பிளஸ் 2 மாணவர்கள் இருவர், தங்கள் விரும்பம் போல் பள்ளிக்கு வருவதும் போவதுமாக இருந்துள்ளனர். இதற்காக இருவரையும் திட்டிய முதல்வர் சக்சேனா, மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து புகார் தெரிவிக்க திட்டமிட்டு இருந்தார்.
“இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், தலைமை ஆசிரியரை தலையில் சுட்டுவிட்டு, அவரது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர். அவர்களை தேடி வருகிறோம். அவர்களுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்றும் விசாரித்து வருகிறோம்,” என்றார்.