கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு அக்.10ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு அக்.10ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
ADDED : அக் 08, 2025 04:02 AM
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரிய மனுக்களை, உச்ச நீதிமன்றம் நாளை மறுநாள் விசாரிக்கிறது.
த.வெ.க., தலைவர் விஜய் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ல் நடத்திய பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
மற்றொரு பக்கம் போலீஸ் சார்பிலும், ஐ.ஜி., அஸ்ரா கர்க் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் பிச்சமுத்து என்பவர், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதேபோல பா.ஜ.,வை சேர்ந்த உமா ஆனந்த் என்பவரும் சி.பி.ஐ., விசாரணை கேட்டு தனியாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டு மனுக்களையும் விரைவாக விசாரிக்க கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், வரும், 10ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக அறிவித்தார். 'கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நடத்தி வரும் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த விவகாரத்தில் அனைத்து தவறுகளும், அரசு நிர்வாகத்தின் தரப்பில் தான் இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்றால், சி.பி.ஐ., விசாரணை தேவை' என, மனுவில் கோரப்பட்டுள்ளது.
-டில்லி சிறப்பு நிருபர்-