ஆன்லைன் சூதாட்ட மோசடி வழக்கு ஈ.டி., முன் சுரேஷ் ரெய்னா ஆஜர்
ஆன்லைன் சூதாட்ட மோசடி வழக்கு ஈ.டி., முன் சுரேஷ் ரெய்னா ஆஜர்
ADDED : ஆக 14, 2025 01:06 AM

புதுடில்லி: ஆன்லைன் சூதாட்ட மோசடி வழக்கு தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, டில்லியில் ஈ.டி., எனப்படும், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
ஆன்லைன் சூதாட்ட செயலிகள் வாயிலாக சட்டவிரோதமாக, 2,000 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக நாடு முழுதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
'பாரிமேட்ச்' என்ற சூதாட்ட செயலியை பயன்படுத்தி போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு பணமோசடி நடந்ததாக விசாரணை நடந்து வருகிறது.
ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
அவர், '1எக்ஸ்பெட்' என்ற ஆன்லைன் சூதாட்ட செயலியின் விளம்பர துாதராக செயல்பட்டிருந்தார். அதனடிப்படையில் சுரேஷ் ரெய்னாவிடமும் விசாரணை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, டில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அவர் நேற்று ஆஜரானார்.
சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். சூதாட்ட செயலி விளம்பரத்திற்கான ஒப்பந்த முறை, கட்டணத்தொகை என பல்வேறு தகவல்களை அதிகாரிகள் சுரேஷ் ரெய்னாவிடம் கேட்டுப் பெற்றனர்.