பயிரை மேய்ந்தது வேலி; 17 கோடி ரூபாய் தங்கத்துடன் பழைய மேனேஜர் ஓட்டம்!
பயிரை மேய்ந்தது வேலி; 17 கோடி ரூபாய் தங்கத்துடன் பழைய மேனேஜர் ஓட்டம்!
ADDED : ஆக 17, 2024 08:45 AM

கோழிக்கோடு: கேரளா மாநிலம், கோழிக்கோட்டில், தமிழகத்தைச் சேர்ந்த வங்கி மேலாளர் ரூ.17 கோடி மதிப்புள்ள 25 கிலோ அடகு நகைகளுடன் தப்பிச் சென்றார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் மேலாளர் ஆக, தமிழகம், திருச்சியைச் சேர்ந்த மது ஜெயக்குமார் பணியாற்றி வந்துள்ளார். அவர் கடந்த ஜூன் மாதம் கொச்சியில் உள்ள கிளை வங்கி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
புதிய மேலாளராக, பனூரை சேர்ந்த இர்ஷாத் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். பணியில் இணைந்த உடன், அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகை அனைத்தையும் ஆய்வு செய்தார். அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது; மொத்தமும் போலி நகை என்பதை அறிந்ததும், அவருக்கு மயக்கமே வந்து விட்டது.
போலி தங்கம்
பணி மாறுதல் செய்யப்பட்ட மது ஜெயக்குமார், ஒரிஜினல் நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை வைத்து, மொத்தமும் ஆட்டையை போட்டது அனைவருக்கும் புரிந்தது. புதிய பணியிடத்தில் சென்று சேரவும் இல்லை என்பதால், திட்டமிட்டு இந்த வேலையை அவர் செய்திருப்பது தெரியவந்தது.
ரூ. 17 கோடி இழப்பு
இதையடுத்து பழைய மேலாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த தங்க ஆபரணங்களை வங்கியில் கணக்கு வைத்துள்ள 42 பேர் அடகு வைத்துள்ளனர். நகை போனதால், வங்கிக்கு ரூ. 17 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மாயமான முன்னாள் மேலாளர் மது ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

