ADDED : நவ 20, 2024 02:31 AM

சபரிமலை:சபரிமலைக்கு பாலிதீன் கொண்டு வருவதை தவிர்க்கவும், மலையை சுத்தமாக பராமரிக்கவும் தலைமை பூஜாரியான தந்திரி கண்டரரு ராஜீவரரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் கூறியது: விரதத்தில் எவ்வளவு கவனம் செலுத்துகிறார்களோ அது பயணத்திலும் இருக்க வேண்டும். இருமுடி கட்டில் பாலிதீன் பைகள் இருக்கக்கூடாது.
சபரிமலை என்பது 18 மலைகளால் சூழப்பட்டது. இந்த மலைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டியது பக்தரின் கடமை.
தேவையில்லாத ஆசாரங்களை சபரிமலையில் செய்ய வேண்டாம். பம்பையில் சோப்பு போட்டு குளிப்பதும், ஆடைகளையும் விட்டுச் செல்வதும் மிகவும் தவறு. இப்படி ஒரு ஆசாரம் இங்கு கிடையாது. இதை பக்தர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இது அவர்கள் ஐயப்பனுக்கு செய்யும் சேவையாக அமையும். இந்த சீசனில் நடை திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு நல்ல தரிசனம் கிடைக்கிறது. இதற்காக கேரளா அரசும் தேவசம் போர்டும் நல்ல முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.