ADDED : பிப் 04, 2024 11:17 PM
கதக்: ''சக்தி திட்டத்தால், கர்நாடகத்தில் பஸ்களில் பயணிக்கும் பயணியரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ள நிலையில், மார்ச் இறுதிக்குள் 5,800 பஸ்களை வாங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது,'' என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
கதக்கில் அமைச்சர் கூறியதாவது:
கதக்கில் புதிதாக 325 பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர் அழைக்கப்படும். இதன் மூலம் மாநில மக்களுக்கு தரமான பஸ் சேவைகளை வழங்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
சக்தி திட்டத்தை செயல்படுத்தியதால், கர்நாடகத்தில் சிறு பிரச்னை ஏற்பட்டது. அதை சரி செய்ய தேவையான உதவிகளை முதல்வர் செய்வார். கடந்த ஏழு ஆண்டுகளாக எந்த நியமனமும் நடக்கவில்லை.
நான் அமைச்சரான பின், 9,000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி அளித்து, அந்தந்த துறை அமைப்புகளுக்கு ஆள்சேர்க்கும் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் மீண்டும் மாதந்தோறும் ஓட்டுனர் உரிமம் வழங்கும் முகாம் நடத்தப்படும்.
சக்தி திட்டத்தால், கர்நாடகாவில் பஸ்களில் பயணிக்கும் பயணியரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ள நிலையில், மார்ச் இறுதிக்குள் 5,800 பஸ்களை வாங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

