ADDED : நவ 26, 2024 01:24 AM
ஹைதராபாத்: பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி லஞ்சம் வழங்கியதாக அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது குழுமம் வழங்கிய, 100 கோடி ரூபாய் நன்கொடையை ஏற்க, தெலுங்கானா அரசு மறுத்து உள்ளது.
சூரிய மின்சக்தி திட்டத்தை பெற இந்திய அதிகாரிகளுக்கு, 2,200 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியதாக, பிரபல தொழிலதிபரும், அதானி குழும தலைவருமான கவுதம் அதானி மீது, அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை, அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் கட்டப்பட்டு வரும், 'யங் இந்தியா ஸ்கில்ஸ் யுனிவர்சிட்டி'க்கு அதானி குழுமம் கடந்த மாதம் வழங்கிய, 100 ரூபாய் நன்கொடையை ஏற்க மறுப்பதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறுகையில், “இந்த நேரத்தில் தெலுங்கானா அரசு சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை,” என்றார்.

