காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ வீரர் வீரமரணம்; மூவர் காயம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ வீரர் வீரமரணம்; மூவர் காயம்
ADDED : நவ 11, 2024 12:46 AM

ஜம்மு : ஜம்மு - காஷ்மீரில் வனப்பகுதிக்குள் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இதில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மூன்று பேர் காயமடைந்தனர்.
ஜம்மு - காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட்டத்தை ஒட்டியுள்ள கெஷ்வான் வனப்பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு படையினர் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், அவர்களை நோக்கி சுட்டனர்.
இதற்கு, பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு பேர் காயமடைந்தனர்.
அவர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர்களது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்தனர்.
இதில், ராகேஷ் குமார் என்ற வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இரு தரப்பினருக்கு இடையே சண்டை நடந்து வருகிறது.
சமீபத்தில், கிராம பாதுகாவலர்கள் இருவரை பயங்கரவாதிகள் கடத்தி கொலை செய்தனர்.
இந்த பயங்கரவாத கும்பல் மீது தான் தற்போது நம் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி வருவதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.