ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; பாதுகாப்பு அதிகரிப்பு
ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; பாதுகாப்பு அதிகரிப்பு
ADDED : மே 05, 2025 10:19 AM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜெயில் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்.,22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறால் இருக்க பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தெற்கு காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருப்பதாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிறைகளில் முக்கிய தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதிகளும், ஸ்லீப்பர் செல் உறுப்பினர்களும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, ஸ்ரீநகர் மத்திய சிறை, ஜம்முவில் உள்ள கோட் பால்வால் சிறையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.