பயங்கரவாதிகள் மீண்டும் சதி 48 சுற்றுலா தலங்கள் மூடல்
பயங்கரவாதிகள் மீண்டும் சதி 48 சுற்றுலா தலங்கள் மூடல்
ADDED : ஏப் 30, 2025 07:01 AM
ஜம்மு: பயங்கரவாதிகள் மீண்டும் பெரிய அளவில் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, சுற்றுலா பயணியர் அதிகம் வரும் 48 இடங்களை ஜம்மு - காஷ்மீர் அரசு மூடியுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர்.
பைசரன் புல்வெளி பகுதியில் நடந்த இந்த தாக்குதலைத் தொடர்ந்து, சுற்றுலா மிக முக்கியத் தொழிலாக உள்ள ஜம்மு - காஷ்மீரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லைக்கு அப்பாலில் இருந்து நம் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் மீது இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.
இதைத் தவிர, ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்றும் புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.குறிப்பாக, பாதுகாப்பு படையினர், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை குறிவைத்து பெரிய அளவில் தாக்குதல் நடத்த பயங்ககரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் பாக்., உளவு அமைப்பு இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
மேலும், ரயில்வே கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, யூனியன் பிரதேசத்தில் உள்ள, 87 முக்கிய சுற்றுலா தலங்களில், 48ஐ மூடுவதாக, ஜம்மு - காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.
பத்காம் மாவட்டத்தின் தோடாபத்ரி, அனந்த்நாக்கில் உள்ள வெரிநாக் உள்ளிட்டவை இதில் அடங்கும். பாதுகாப்புப் படையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பஞ்சாப் மாநிலம் டர்ன் டரன் மாவட்டம் நவ்ஷேரா பகுதியைச் சேர்ந்த ஜோத்பிர் சிங் என்பவரை, போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து, 5 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் இவருக்கு தொடர்பு இருப்பதும், அங்கிருந்து இந்த துப்பாக்கி கடத்தி வரப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.