மராத்தி பேசாத உணவக உரிமையாளர் மீது ராஜ் தாக்கரே கட்சியினர் தாக்குதல்
மராத்தி பேசாத உணவக உரிமையாளர் மீது ராஜ் தாக்கரே கட்சியினர் தாக்குதல்
ADDED : ஜூலை 02, 2025 11:00 AM

தானே: மஹாராஷ்டிராவில் மராத்தி பேசாத உணவக உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
தானே மாவட்டம் பாயேந்தர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு ராஜ் தாக்கரேவின் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் சென்றிருக்கின்றனர். அங்கு அவர்கள் உணவு வாங்கிய போது, அந்த கடையின் உரிமையாளர் மராத்தி பேசாமல் இருந்துள்ளார்.
ஆனால் அவரை மராத்தியை கட்டாயமாக பேச வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். உணவக உரிமையாளர் அதை செவிமடுக்காமல் தொடர்ந்து ஹிந்தியில் பேசியதாக தெரிகிறது. அப்போதும் விடாத அவர்கள், திடீரென சரமாரியாக அவரது கன்னத்தில் அறைந்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மராத்தி மொழியை பேசித்தான் ஆக வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தபடியே அவர்கள் சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான உணவக உரிமையாளர், இது குறித்து காஷிமிரா போலீஸ்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதல் நடத்திய மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்களை தேடி வருகின்றனர். அதே நேரத்தில் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.