இந்திய மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி: இலங்கை பிரதமர்
இந்திய மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி: இலங்கை பிரதமர்
ADDED : அக் 17, 2025 07:49 PM

புதுடில்லி: ''இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்னையின் போது இந்தியா செய்த உதவிக்காக பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'', என இலங்கை பிரதமர் கூறியுள்ளார்.
டில்லியில் ஆங்கில மீடியா சார்பில் நடந்த மாநாட்டில் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா பேசியதாவது: 1991 ல் டில்லியில் மாணவியாக இருந்தேன். அது மாற்றத்துக்கான காலமாக இருந்தது. தற்போது திரும்பி வந்து பார்க்கும்போது, இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்க்கிறேன். 140 கோடி மக்கள் வாழும் துடிப்பான நாடாக உள்ளது. 2022 ல் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்னையின் போது இந்தியா செய்த உதவிக்காக பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மறுமலர்ச்சிக்கான முதல் நடவடிக்கையாக ரிஸ்க் எடுக்க வேண்டும்.
தலைவர்களாக நாம் எடுக்கும் இந்த ரிஸ்க் தான் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக உணர வைக்கும். சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். கோவிட்டுக்கு பிறகு இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்னைகள் எழுந்தன. ஆனால் மக்களின் நம்பிக்கை பிராகசித்தது.
இலங்கையில் நடந்த அதிபர் மற்றும் பார்லிமெண்ட் தேர்தல்கள் முன்னேற்றத்தை நோக்கிய நாட்டுக்கு தெளிவான பயணத்தை கொடுத்தது. எங்களது கடன் திட்டங்களை மறுசீரமைத்துள்ளோம். பொது கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கி வருகிறோம். இலங்கைக்கு ஆதரவாக இந்தியா எப்போதும் நின்றுள்ளது. இந்தியா உடனான நட்பு வலுவடைந்து வருகிறது. சர்வதேச உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.