வேகமானவர்களுக்கே வெற்றி என்பதே தற்போதைய மந்திரம்; ராஜ்நாத் சிங் பேச்சு
வேகமானவர்களுக்கே வெற்றி என்பதே தற்போதைய மந்திரம்; ராஜ்நாத் சிங் பேச்சு
ADDED : ஜன 27, 2026 10:34 PM

புதுடில்லி: போர்க்களத்தில், வலிமையானவர்களுக்கே வெற்றி என்பது பழைய காலம்; வேகமானவர்களுக்கே வெற்றி என்பதே தற்போதைய மந்திரம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
டில்லியில் நடந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) நிகழ்வில், ராஜ்நாத் சிங் பேசியதாவது: இன்று புதிதாக தோன்றும் ஒரு தொழில்நுட்பம், அடுத்த நான்கு ஆண்டுகளில் பழையதாகி விடும். இது வேகத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. போர்க்களத்தில், வலிமையானவர்களுக்கே வெற்றி என்பது பழைய காலம்; வேகமானவர்களுக்கே வெற்றி என்பதே தற்போதைய மந்திரம்.
சிந்தித்து, முடிவெடுத்து, தொழில்நுட்பத்தை விரைவாகப் பயன்படுத்தும் நாடு முன்னேறும். இந்தியாவின் வளர்ந்து வரும் உள்நாட்டு பாதுகாப்பு திறன்களுக்கு ஒரு சான்றாக, ஆப்பரேஷன் சிந்தூரின் வெற்றி அமைந்துள்ளது. டிஆர்டிஓ தொழில்நுட்பங்கள் போர்க்களத்தில் திறம்பட பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உள்நாட்டுமயமாக்கல் மூலம் பாதுகாப்புத் துறையின் தொடர்ச்சியான மாற்றத்திற்கு மையமாக இருக்கிறது. 2014ம் ஆண்டில் ரூ.1,000 கோடிக்குக் குறைவாக இருந்த பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி தற்போது ரூ.24 ஆயிரம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. 2029-30ம் ஆண்டுக்குள் ரூ.50,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

