உச்ச நீதிமன்றத்தை நாடிய அமலாக்க துறை: 'கேவியட்' மனு தாக்கல் செய்தது மே.வங்கம்
உச்ச நீதிமன்றத்தை நாடிய அமலாக்க துறை: 'கேவியட்' மனு தாக்கல் செய்தது மே.வங்கம்
ADDED : ஜன 11, 2026 12:27 AM

புதுடில்லி: மேற்கு வங்கத்தில், 'ஐ - பேக்' நிறுவனத்தில் நடந்த சோதனையை, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குறுக்கிட்டு தடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு போட்டியாக, மேற்கு வங்க அரசும், 'கேவியட்' மனு தாக்கல் செய்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. வரும் ஏப்ரலில், தமிழகத்துடன் சேர்த்து இங்கும் சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு, 'ஐ - பேக்' நிறுவனம் தேர்தல் வியூகங்களை வகுத்து தருகிறது.
இந்நிறுவனத்தின் தலைவர் பிரதீக் ஜெயின், திரிணமுல் காங்., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராகவும் உள்ளார்.
நிலக்கரி ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில், கொல்கட்டாவில் உள்ள ஐ - பேக் நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.
இதை அறிந்த முதல்வர் மம்தா பானர்ஜி, போலீஸ் உயரதிகா ரிகள் புடைசூழ, பிரதீக் ஜெயின் வீட்டுக்கு வந்து சில முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றார்.
இந்த விவகாரத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி - அமலாக்கத் துறையினர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டினர். சோதனையை முதல்வர் ம ம்தா பானர்ஜி குறுக்கிட்டு தடுத்ததாகவும், அவர் மீது வழக்குப் பதிந்து சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடக் கோரியும், கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தது.
பிரதீக் ஜெயின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்கக் கோரி, ஆளும் திரிணமுல் காங்கிரசும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த இரு வழக்குகளும் வரும், 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் உடனடி நிவாரணம் கிடைக்காத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், சோதனையின் போது நடந்த நிகழ்வுகளை வரிசைப்படுத்தியுள்ள அமலாக்கத் துறை, மேற்கு வங்க அரசின் தலையீட்டால் நியாயமான விசாரணை நடத்தும் உரிமை பறிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து சி.பி. ஐ., விசாரிக்க உத்தரவிடக் கோரியும் வலியுறுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் தங்களது தரப்பை கேட்காமல் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த இரு மனுக்களும் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, தெரிகிறது.

