ஒமர் அப்துல்லா கொண்டு வந்த முதல் தீர்மானம் : மத்திய அரசு செவி சாயக்குமா ?
ஒமர் அப்துல்லா கொண்டு வந்த முதல் தீர்மானம் : மத்திய அரசு செவி சாயக்குமா ?
ADDED : அக் 18, 2024 06:59 PM

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என ஆளும் தேசிய மாநாடு கட்சி முதல் அமைச்சரவை தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.
90 தொகுதிகளை கொண்ட ஜம்மு - காஷ்மீருக்கு கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. தேசிய மாநாடு கட்சி 42 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றன. பா.ஜ., 29 தொகுதிகளை பிடித்தது. தேசிய மாநாடு கட்சியின் ஒமர் அப்துல்லா கடந்த 16-ம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில் இன்று (அக்.,18) தேசிய மாநாடு கட்சியின் முதல் அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதையடுத்து முதல்வர் ஒமர் அப்துல்லா விரைவில் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக தேசிய மாநாடு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எங்களின் கோரிக்கையை மத்திய அரசு நிச்சயம் பரிசீலித்து நிறைவேற்றும் என தேசிய மாநாடு கட்சி மூத்த தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்தார்.