கிருஷ்ண ஜென்மபூமி விவகாரம்: ஆய்வுக்கு வழங்கப்பட்ட அனுமதிக்கு தடை
கிருஷ்ண ஜென்மபூமி விவகாரம்: ஆய்வுக்கு வழங்கப்பட்ட அனுமதிக்கு தடை
ADDED : ஜன 16, 2024 08:06 PM

புதுடில்லி: உத்தர பிரதேசத்தின் மதுராவில், ஷாஹி இத்கா வளாகத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் ஆய்வு நடத்த அனுமதி வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
உ.பி.,யில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மதுராவில், கிருஷ்ணர் பிறந்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன.இந்நிலையில், மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடத்தை இடித்து, அந்த இடத்தில், 17ம் நுாற்றாண்டில் மசூதி கட்டப்பட்டதாகவும், அங்கு அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த அனுமதி கோரியும், 2022 டிசம்பரில், மதுரா நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த மதுரா நீதிமன்றம், ஷாஹி இத்கா மசூதி வளாகத்தில், இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முஸ்லிம் அமைப்பு சார்பில் மேல் முறையீடு செய்தது.இந்த மனுவை, கடந்த ஆண்டு டிச., 14ம் தேதி விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், நீதிமன்ற கண்காணிப்பில், ஷாஹி இத்கா வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த அனுமதி வழங்கியதோடு, ஆய்வை மேற்பார்வையிட கமிஷனராக வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கவும்
உத்தரவிட்டது.
அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், மசூதி நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:ஷாஹி இத்கா வளாகத்தில் ஆய்வு நடத்த, அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.
நீதிமன்ற கமிஷனரை நியமிக்கும் விவகாரத்தில், தெளிவற்ற விண்ணப்பத்தை தாக்கல் செய்ய முடியாது. இது, குறிப்பிட்ட நோக்கத்துக்காக இருக்க வேண்டும்.எல்லாவற்றையும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விட முடியாது. இது தொடர்பாக ஹிந்து அமைப்புகள் பதிலளிக்க, நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதில், உயர் நீதிமன்றத்தில் உள்ள நடவடிக்கைகள் தொடரும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.