மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்டவர் உ.பி.,யில் கைது
மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்டவர் உ.பி.,யில் கைது
UPDATED : ஜூலை 09, 2025 10:59 AM
ADDED : ஜூலை 09, 2025 03:57 AM

லக்னோ : உத்தர பிரதேசத்தில் மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்ட சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரின் வீடுகள் புல்டோசர் வாயிலாக இடித்து தள்ளப்பட்டன.
பயங்கரவாதம்
உ.பி., பல்ராம்பூர் மாவட்டத்தில் சட்டவிரோத மற்றும் மதமாற்ற நடவடிக்கைகள் நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்டம் முழுதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
மாத்பூர் பகுதியைச் சேர்ந்த சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன் என்பவர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, அவரை பிடித்து தருபவர்களுக்கு 50,000 ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மாத்பூர் பகுதியில் பதுங்கியிருந்த சங்கூர் பாபா மற்றும் அவருடன் இருந்த நீத்து என்ற நஸ்ரின் ஆகியோரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நாச வேலைகளில் அவர்கள் ஈடுபட இருந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், மதமாற்ற கும்பலின் முக்கிய மூளையாக சங்கூர் பாபா செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.
மாத்பூர் மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டங்களில், ஹிந்துக்கள் மற்றும் பிற சமூகத்தினரை இஸ்லாமியராக மதமாற்றம் செய்யும் செயலில் அவர் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
நடவடிக்கை
'ஏழைகள், ஆதரவற்ற தொழிலாளர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், கணவரை இழந்த பெண்கள் ஆகியோருக்கு நிதியுதவி அளிப்பதாக கூறியும், திருமண வாக்குறுதி தந்தும், மிரட்டல் விடுத்தும், மதமாற்ற நடவடிக்கையில் இருவரும் ஈடுபட்டு வந்தனர்' என, போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஜமாலுதீன், மெஹபூப், சங்கூர் பாபா, நஸ்ரின் ஆகியோரின் சட்டவிரோத சொத்துக்களை மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் புல்டோசர் வாயிலாக நேற்று இடித்து தள்ளினர்.
குற்றம் சாட்டப்பட்ட சங்கூர் பாபாவின் செயல்பாடுகள் சமூகத்திற்கு மட்டுமல்ல, தேசத்திற்கும் எதிரானவை என்பது தெரியவந்துள்ளது. மதமாற்ற கும்பலுடன் தொடர்புடையவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். இந்த விஷயத்தில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை.
- யோகி ஆதியநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,