UPDATED : மே 18, 2024 02:47 AM
ADDED : மே 18, 2024 02:44 AM

புதுடில்லி: மாயமானதாக கூறப்பட்ட பிரபல பஞ்சாப் 'டிவி' நடிகர் குருசரண் சிங், வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில், பிரபல டிவி நிகழ்ச்சியான தாரக் மேத்தா கா உல்டா சாஷ்மாவில் ரோஷன் சிங் ஜோதியாக நடித்து பிரபலமடைந்தவர் குருசரண் சிங், 50. டில்லியில் வசித்து வந்த இவரை, கடந்த மாதம் 22-ம் தேதியன்று காணவில்லை. கடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
டில்லி பாலம் போலீஸ் ஸ்டேஷனில், குருசரண் சிங்கின் தந்தை ஹர்கித் சிங் புகாரளித்தார். அதில், 'கடந்த 22ல் டில்லியில் இருந்து மும்பை செல்வதாக கூறி, டில்லி விமான நிலையத்துக்கு என் மகன் குருசரண்சிங் சென்றார். ஆனால், அவர் மும்பை சென்று சேரவில்லை.'அவரது மொபைல் போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கண்டுபிடித்து தாருங்கள்' என, கூறியிருந்தார்.
போலீசார் எப்.ஐ.ஆர்.பதிந்து தேடிவந்த நிலையில் அவர் வீடு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப்பில் குருத்வாரா, அமிர்தசரஸ், லூதியானா ஆகிய நகரங்களில் ஆன்மிக பயணம் மேற்கொண்டதாக கூறியுள்ளார்.

