தடை செய்யப்பட்ட சீன டிரோன் இயக்கிய ராகுல்; விதிமுறை பொருந்தாதா என கேள்வி!
தடை செய்யப்பட்ட சீன டிரோன் இயக்கிய ராகுல்; விதிமுறை பொருந்தாதா என கேள்வி!
ADDED : பிப் 17, 2025 06:49 PM

புதுடில்லி: தடை செய்யப்பட்ட சீன டிரோனை காங்கிரஸ் தலைவர் ராகுல் இயக்கிய வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சமூக வலைதளத்தில் டிரோன் இயக்குவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், 'நாட்டுக்கு டிரோன் உற்பத்தி செய்வதற்கு வலிமையான உற்பத்தி தளம் தேவை; வெற்று வார்த்தைகள் தேவையில்லை.
''டிரோன்கள் என்பவை வெறும் தொழில்நுட்பம் மட்டுமில்லை. அவை வலிமையான தொழில் துறையால் உற்பத்தி செய்யப்படும் படைப்புகள். ஆனால் இதை மோடி புரிந்து கொள்ளவில்லை' என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோ குறித்து இந்தியா டிரோன் பெடரேசன் அமைப்பை சேர்ந்த ஸ்மித் ஷா கூறுகையில்,
''ராகுல், தடை செய்யப்பட்ட சீன டிரோனை பெருமையாக காட்டி, இந்திய டிரோன் உற்பத்தி துறையை மலினப்படுத்துகிறார். இந்தியாவில் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டிரோன் உற்பத்தி செய்கின்றன.
50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், டிரோன்களுக்கான சாதனங்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றுக்கான பேட்டரி, புரப்பல்லர்கள், கன்ட்ரோலர்கள், மோட்டார்களை உற்பத்தி செய்கின்றன. இதை பற்றி தெரியாமல், வெறுமனே குறை கூறுவது தவறு'' என்று கூறியுள்ளார்.
ராகுல் பறக்க விட்ட டிஜேஐ டிரோன்கள் 2022ம் ஆண்டு முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. அதை எப்படி அவர் வாங்கினார். அனைத்து டிரோன்களும் டிஜிட்டல்ஸ்கை தளத்தில் பதியப்பட வேண்டும். இது பதியப்பட்டுள்ளதா? டிரோன் இயக்க பைலட் லைசன்ஸ் வேண்டும், அவரிடம் இருக்கிறதா? அவரது வீட்டில் அவர் டிரோன் இயக்க வேண்டும் என்றால், அவர் உள்துறை அமைச்சகத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவருக்கு விதிகள் பொருந்தாதா' என்றும் ஸ்மித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்போசிஸ் நிறுவன முன்னாள் சி.எப்.ஓ., மோகன்தாஸ் பையும், ராகுல் செயலை கண்டித்துள்ளார். 'இப்படி போலியான தோற்றத்தை ஏற்படுத்துவதை முதலில் நிறுத்துங்கள். ராகுல் பயன்படுத்துவது, இந்திய டிரோனா, சீனா டிரோனா என்று பாருங்கள்' என்றும் அவர் கூறியுள்ளார்.