பீஹார் அரசு இளைஞர்களின் ஆசை, கனவுகளை அழித்தது; ராகுல் குற்றச்சாட்டு
பீஹார் அரசு இளைஞர்களின் ஆசை, கனவுகளை அழித்தது; ராகுல் குற்றச்சாட்டு
UPDATED : அக் 28, 2025 07:37 PM
ADDED : அக் 28, 2025 05:14 PM

புதுடில்லி: பீஹாரில் இளைஞர்களின் ஆசை, கனவுகளை தேஜ கூட்டணி அரசு அழித்துவிட்டது என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.
பீஹார் மாநில இளைஞர்களுடன் உரையாடிய வீடியோவை, சமூக வலைதளத்தில் பகிர்ந்து ராகுல் கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன்பு, பீஹார் மாநில இளைஞர்களுடன் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என ஒவ்வொரு பிரச்னை குறித்தும் மிகவும் சுவாரஸ்யமான உரையாடலை நடத்தினேன். மேலும், அவர்களின் அவலநிலைக்கு ஒரே ஒரு குற்றவாளி மட்டுமே இருக்கிறது. அது ஆளும் தேஜ கூட்டணி அரசு.
இளைஞர்களின் கனவு மற்றும் ஆசைகளை அழித்துவிட்டது. தங்களை மாநில அரசு படுகுழியில் தள்ளி விட்டது என்பதை பீஹார் மாநில இளைஞர்கள் நன்கு அறிவார்கள். பீஹார் மாநிலம் 9-10ம் வகுப்புகளில் மாணவர்கள் இடைநிற்றலில், 29 மாநிலங்களில் 27வது இடத்தில் உள்ளது. தொழில் மற்றும் உற்பத்தித் துறையில் 23வது இடத்தில் இருக்கிறது. குழந்தை இறப்பு விகிதத்தில் 27 வது இடத்தில் இருக்கிறது. தனிநபர் வருமானத்தில் 25 வது இடத்தில் இருக்கிறது. இவை வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல. இவை ஒரு கண்ணாடி.
இந்த பாஜ அரசு பீஹாரை முன்னேற்றத்திலிருந்து எவ்வளவு தூரம் பின்வாங்க வைத்துள்ளது என்பதைக் காட்டும் ஒரு பின்புறக் கண்ணாடி. நான் சந்தித்த அனைத்து பீஹாரி இளைஞர்களும் நம்பமுடியாத அளவிற்கு நம்பிக்கைக்குரியவர்கள் மற்றும் புத்திசாலிகள். அவர்கள் தங்கள் திறமை மற்றும் கடின உழைப்பால் எல்லா இடங்களிலும் பிரகாசிக்க முடியும். ஆனால் வாய்ப்புகளுக்குப் பதிலாக, அரசு அவர்களுக்கு வேலையின்மை மற்றும் ஏமாற்றத்தை மட்டுமே வழங்கியுள்ளது. மாற்றத்திற்கான நேரம் இது. நீதிக்கான மகா கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிய நேரம். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

